Published : 29 Jun 2022 11:38 AM
Last Updated : 29 Jun 2022 11:38 AM

உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் ஒருவரை கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய இருவருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக என்ஐஏ குழு ஒன்று உதய்பூர் சென்றுள்ளது. உதய்பூரில் நேற்றிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக போலீஸ் படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பின்னணியில் பாகிஸ்தான் அமைப்புகள்: பாகிஸ்தானின் கராச்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சன்னி முஸ்லிம்களின் அடிப்படைவாத அமைப்பான தாவத் இ இஸ்லாமி குழுவுடனும், தெஹ்ரிக் இ லப்பைக் என்ற பயங்கரவாத அமைப்புடனும் கொலையாளிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை நோக்கி விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நடந்தது என்ன? ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் நேற்று அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது கழுத்தை அறுத்தனர். தலையை தனியாக துண்டிக்க முயன்று முடியாத நிலையில் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

கொலையாவதற்கு முன்னர் கொலையாளியை அளவு எடுக்கும் டெய்லர்

இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸார் விசாரணையில், முஸ்லிம்களின் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து தவறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கன்னையா லால் படுகொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கன்னையா லாலை படுகொலை செய்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு நபர் கவுஸ் முகமது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மடக்கிப் பிடித்த போலீஸ்: படுகொலை செய்த பில்வாராவைச் சேர்ந்த ரியாஸ் அட்டாரி (38), உதய்பூரைச் சேர்ந்த கவுஸ் முகமது ஆகியோர் படுகொலைக்குப் பின்னர் அங்கிருந்து தப்பித்து ஆஜ்மீர் ஷரீஃப் தர்காவை நோக்கிச் சென்றனர். அங்கிருந்து ஒரு வீடியோவை எடுத்து பரப்புவதே அவர்களின் திட்டம். ஆனால் அதற்குள் அவர்களை போலீஸார் ராஜ்சமந்த் என்ற இடத்தில்வைத்து மடக்கிப் பிடித்தனர். இவர்கள் இருவரும் சன்னி முஸ்லிம் பிரிவின் சூஃபி பரேல்வி உட்பிரிவைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் இருவர் மீதும் சட்டவிரோத ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x