Published : 27 Jun 2022 05:10 AM
Last Updated : 27 Jun 2022 05:10 AM

அசாமில் தங்கியுள்ள சிவசேனா கட்சியின் 15 எம்எல்ஏக்கள் வீடுகளுக்கு கமாண்டோ பாதுகாப்பு: அமித் ஷாவுடன் ஏக்நாத் ஷிண்டே ரகசிய ஆலோசனை

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் வேண்டுகோளின்படி அவர்களின் வீடுகளுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து எம்எல்ஏ சதா சர்வாங்கர் வீட்டு முன்பு நேற்று பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த சிஆர்பிஎப் கமாண்டோக்கள்.படம்: பிடிஐ

மும்பை: அசாமில் சொகுசு ஓட்டலில் தங்கியுள்ள சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் வீடுகளுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சிநடந்து வருகிறது. ‘மகா விகாஸ்அகாடி’ என்ற பெயரில் கூட்டணிஉருவாக்கப்பட்டு ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கினார். காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்துவிலகி, பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

இவருக்கு ஆதரவாக சிவசேனாவைச் சேர்ந்த 40 எல்எல்ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சில சுயேச்சை எம்எல்ஏக்களும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக உள்ளனர். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் முதலில் குஜராத் மாநிலம் சூரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அசாம்மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, குவாஹாட்டியில் உள்ளசொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஆட்சியை தக்கவைக்க சிவசேனா தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவருடன்உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், சுயேச்சை மற்றும் சிறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசாமில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த ஷிண்டே, அங்கிருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு விமானத்தில் சென்றதாகவும், அங்கு அமித் ஷா, பட்னாவிஸ் ஆகியோரை சந்தித்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுத்தால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகுதி நீக்க நோட்டீஸ்

இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தலைமையில் அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இந்தக்கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவுடன்குவாஹாட்டியில் தங்கியுள்ள சிவசேனா எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் 16 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை துணைத் தலைவர், தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 27-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, “எங்களை மிரட்ட தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள சிவசேனா திட்டமிட்டுள்ளது. நாங்கள் கட்சியை விட்டு விலகவில்லை. இதனால், தகுதி நீக்க நடவடிக்கை மூலம் எங்களை மிரட்ட முடியாது. எங்களுக்கும் சட்டம் தெரியும்” என்றார்.

இதுதொடர்பாக சிவசேனா கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் வட்டாரம் கூறும்போது, “அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா தலைமை முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அவ்வாறு எங்களை தகுதி நீக்கம் செய்ய இயலாது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து சிவசேனா விலக வேண்டும். பின்னர் பாஜகவுடன் இணைந்துஆட்சியமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்று தெரிவித்தன.

அமைச்சர்களுக்கு கெடு

இதனிடையே, சிவசேனாவின் அதிருப்தி அமைச்சர்கள் 6 பேரும் கட்சிக்குத் திரும்பி வரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார். இந்த அமைச்சர்கள் அனைவரும் ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் தங்கியுள்ளனர்.

ஒய் பிளஸ் பாதுகாப்பு

இந்நிலையில், தங்களின் வீடுகளில் வழங்கப்பட்டிருந்த மாநிலபோலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாகவும், இதனால் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிருப்தி எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்கள் வேண்டுகோளின்படி எம்எல்ஏக்கள் ரமேஷ் பார்னர், மங்கேஷ் குதல்கல், சஞ்சய் ஷிர்சத், லதாபாய் சோனாவானே, பிரகாஷ் சர்வே உட்பட 15 பேருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, இந்த எம்எல்ஏக்களுக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளில் சிஆர்பிஎப் கமாண்டோக்கள் சுமார் 4 முதல் 5 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருப்பர்.

இன்று விசாரணை

மகாராஷ்டிர சட்டப்பேரவை துணைத் தலைவர் அனுப்பிய தகுதி நீக்கம் நோட்டீஸை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x