Published : 26 Jun 2022 05:04 AM
Last Updated : 26 Jun 2022 05:04 AM

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் - ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை: உடல்நிலை குணமடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார். தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தனது உடல்நிலை குறித்து விசாரித்து, குணமடைய வாழ்த்திய பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக் குறைவால் கடந்த சில ஆண்டுகளாக வெளியே செல்லாமல், வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்.

கடந்த வாரம் உடல்நிலை சற்று மோசமடைந்ததால் சென்னை கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நீரிழிவு பிரச்சினை காரணமாக, அவரது வலதுகாலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால், அந்த விரல் சமீபத்தில் அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில், உடல்நிலை சீரானதை அடுத்து, நேற்று முன்தினம் இரவு அவர் வீடு திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறும், வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு வந்து உடல்நிலையை பரிசோதனை செய்துகொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பிய தகவல் அறிந்த அவரது கட்சியினரும், ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பிரதமர், முதல்வருக்கு நன்றி

இந்நிலையில், தனது உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொலைபேசி மூலமாகவும், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல்நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர். முன்னாள் மத்தியஇணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன். விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மநீம தலைவர் கமல்ஹாசன், சமக தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், நடிகை சரோஜா தேவி மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x