Published : 25 Jun 2022 09:13 AM
Last Updated : 25 Jun 2022 09:13 AM

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் | இன்று கூடுகிறது சிவசேனா செயற்குழு கூட்டம்

பாஜகவுடன் கூட்டணி சேர வலியுறுத்தி கட்சி எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் சிவ சேனா கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுமார் 40 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் முதலில் குஜராத்தின் சூரத் நகருக்கும், பின்னர் அசாம் மாநிலம் குவாஹாட்டிக்கு தனி விமானத்தில் சென்றனர். இவர்களுக்காக குவாஹாட்டியில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதேபோல் கட்சித் தொண்டர்களுக்காக பிர்லா மாதோஸ்ரீ அரங்கத்தில் மகாராஷ்டிரா அமைச்சரும் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே உரையாற்றுகிறார்.

ஏக்நாத் ஷிண்டே

அதிருப்தி எம்எல்ஏக்கள் 38 பேரையும் மீண்டும் வசப்படுத்த சிவசேனா பல்வேறு முயற்சிகளையும் எடுத்துள்ளது. அது ஒருபுறம் இருக்க அதிருப்தி எம்எல்ஏக்கள் 12 பேரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் இன்று அல்லது நாளை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த 12 பேருடன் மேலும் 4 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக சிவ சேனா எம்.பி. அரவிந்த சாவந்த் தெரிவித்தார். நேற்றிரவு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சஞ்சய் ராய்முல்கர், சிமன் பாட்டீல் ரமேஷ் போர்னேர், பாலாஜி கல்யாண்கர் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்றனர்.

ஆனால் சிவசேனாவின் இந்த தகுதி நீக்க முடிவைக் கண்டு அதிருப்தி எம்எல்ஏக்கள் அஞ்சியதாகத் தெரியவில்லை. ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலுக்கு சவால் விடுத்துள்ளார். முடிந்தால் சிவசேனா நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சவால் விடுத்துள்ளார். ‘இதற்கிடையில் சிவசேனா தொண்டர்கள் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக எந்த நேரத்திலும் போராட்டங்களில் ஈடுபடலாம் என்பதால் காவல்துறை தயார்நிலையில் இருக்குமாறு உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று மும்பை குர்லா பகுதியில் சிவசேனா தொண்டர்கள் அதிருப்தி எம்எல்ஏ மங்கேஷ் குடல்கர் புகைப்படம் அடங்கிய பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டணிக் கட்சிகளும் ஆலோசனை: சிவசேனா தனது கட்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மற்றும் மூத்த தலைவர்கள் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸும் எந்த சூழ்நிலையிலும் சிவசேனாவுடன் துணை நிற்போம் என்று கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x