Last Updated : 08 May, 2016 12:42 PM

 

Published : 08 May 2016 12:42 PM
Last Updated : 08 May 2016 12:42 PM

உத்தராகண்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்எல்ஏ.க்களின் மனு மீது நாளை தீர்ப்பு

உத்தராகண்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 9 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த மனு மீதான இறுதி விசாரணை நீதிபதி யு.சி.தயானி முன்பு நேற்று நடைபெற்றது. இருதரப்பு வழக்கறிஞர்களும் சுமார் 3 மணி நேரம் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். பின்னர் நீதிபதி கூறும்போது, “இந்த மனு மீதான விசாரணை முடிந்தது. வரும் 9-ம் தேதி காலை 10.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்” என்றார்.

முன்னதாக, உத்தராகண்ட் சட்டப்பேரவையில் வரும் 10-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், “தகுதி நீக்கம் செய்யப் பட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்துள்ளனர். வாக்கெடுப்பு நடைபெறும்போது இதேநிலை (தகுதிநீக்கம்) தொடர்ந்தால் அவர்கள் வாக் கெடுப்பில் கலந்துகொள்ள முடி யாது” என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், இந்த வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்னதாகவே 9 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப் படும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், பாஜகவுக்கு 28, காங்கிரஸ் 27, பிஎஸ்பி 2, சுயேச்சைகள் 3, உத்தராகண்ட் கிரந்தி தள் (பி) 1 உறுப்பினர்கள் உள்ளனர். இதுதவிர 9 அதிருப்தி எம்எல்ஏக் கள் தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

காங்., பாஜக கொறடாக்கள் உத்தரவு

காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான இந்திரா ஹிருதயேஷ் நேற்று கூறும்போது, ‘‘உத்தராகண்ட் பேரவையில் 10-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு போதுமான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் நாங்கள் இதில் வெற்றி பெறுவோம்’’ என்றார்.

பாஜக தலைமை கொறடா மதன் கவுசிக் கூறும்போது, “கட்சி எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் நகல், டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அனைவருக்கும் வழங்கப்படும். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்எல்ஏக்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மூலம் கொறடா உத்தரவின் நகல் வழங்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x