குஜராத் கலவர வழக்கு: நரேந்திர மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

குஜராத் கலவர வழக்கு: நரேந்திர மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் முடிவை இன்று உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அதனை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. இசன் ஜாப்ரியின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது. அப்போது அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார். இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு விசாரணைக் குழு 2012-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் அப்போது முதல்வராக இருந்த மோடி, முக்கிய காவல்துறை அதிகாரிகள் சதி செய்ததாக கூறப்பட்ட புகாரை மறுத்தது.

எஸ்ஐடியின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி அகமதாபாத் நீதிமன்றத்தில் இசன் ஜாப்ரியின் மனைவி ஜாகியா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றத்திலும் மனு தள்ளுபடியானதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கில் இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில் ‘‘இந்த வழக்கின் விசாரணை மற்றும் இறுதி அறிக்கையை கையாள்வதில் மாஜிஸ்திரேட் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறையில் விதிமீறல் எதுவும் இல்லை.

மேல்முறையீட்டாளரின் வாதத்தை ஏற்க முடியாது. கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி காவல்துறை அறிக்கையை ஏற்று, எதிர்தரப்பு மனுவை நிராகரித்த மாஜிஸ்டிரேட் நீதிமன்ற நீதிபதியின் முடிவை நாங்கள் ஏற்கிறோம். நீதிமன்றத்தில் ஆய்வு மற்றும் முடிவில் எந்த விதிமீறலும் இல்லை’’ எனக் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in