Last Updated : 05 May, 2016 08:21 AM

 

Published : 05 May 2016 08:21 AM
Last Updated : 05 May 2016 08:21 AM

சிகரெட் பாக்கெட்களில் 85 சதவீதம் எச்சரிக்கை படம் வெளியிடுவது கட்டாயம்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

சிகரெட் பாக்கெட்களில் பெரிய அளவில் எச்சரிக்கை படங்களை வெளியிடுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு களை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 15 லட்சத்தை எட்டும் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிகரெட் பாக்கெட்களில் தற்போது 20 சதவீதம் அளவுக்கு வெளியிடப்பட்டு வரும் எச்சரிக்கை புகைப்படங்களை, 85 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வார காலத்துக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

27 அமைப்புகள் மனு

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை உத்தரவை எதிர்த்து கர்நாடக பீடி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மேலும் 27 அமைப்புகளும் வழக்கு தொடர்ந் துள்ளன. அந்த மனுவில், “தற்போது இருப்பதைக் காட்டிலும் பெரிய அளவில் எச்சரிக்கை புகைப்படங்களை வெளி யிடுவது சாத்தியமற்ற செயல். மேலும், இந்த உத்தரவு, கடத்தல் முறையில் இந்தியாவுக்குள் சிகரெட்கள் வர வழிவகுக்கும். எனவே, இந்த உத்தர வுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், பீடி உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு தடை விதிக்கக் கூடாது. கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதி பதிகள், “இந்த உத்தரவுக்கு தடை விதிக்க என்ன இருக்கிறது. இன்றைய தேதியில் மத்திய அரசின் உத்தரவு என்னவாக இருந்தாலும் அதை அமல்படுத்த வேண்டியது சிகரெட் உற்பத்தியாளர் களின் கடமை” என்று கண்டிப்புடன் தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பான வழக்குகள் அனைத்தையும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்குகளை எட்டு வாரங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கும்படி கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x