கட்டிட இடிப்பு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது - உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கட்டிட இடிப்பு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது - உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: கட்டிட இடிப்பு நடவடிக்கை சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது என உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக உ.பி.யில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து கான்பூர், பிரயாக்ராஜ் மற்றும் சகரான்பூரில் வன்முறையில் தொடர்பு இருப்பவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன.

இது சட்டவிரோத செயல் எனவும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும் ஜமாத் உலமா-இ-ஹிந்த் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, விக்ரம் நாத் ஆகியோரைக் கொண்ட விடுமுறைக் கால அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “கட்டிட இடிப்பு நடவடிக்கை சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது” என உ.பி. அரசுக்கு உத்தரவிட்டதுடன் கட்டிட இடிப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

மேலும் வரும் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்கு முன், மனு மீது உ.பி. அரசும் பிரயாக்ராஜ், கான்பூர் மாநகர அதிகாரிகளும் 3 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in