கியான்வாபி மசூதியில் காஸ்மிக் ரே மியுஆன்ஸ் சர்வே சாத்தியக்கூறுகளை அறிய ஏஎஸ்ஐக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு

கியான்வாபி மசூதியில் காஸ்மிக் ரே மியுஆன்ஸ் சர்வே சாத்தியக்கூறுகளை அறிய ஏஎஸ்ஐக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு
Updated on
2 min read

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் விண்வெளிக் கள ஆய்வு நடத்த
பிரதமர் நரேந்திர மோடிக்குவேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது. இது தொடர்பான சாத்தியக் கூறுகளை அறிய ஏஎஸ்ஐ.க்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட் டுள்ளது.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவை சேர்ந்தவர் தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் மணிஷ் அகர்வால். இவர் சமீபத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் வாரணாசி, கியான்வாபி மசூதியில் நடைபெற்ற நேரடிக் கள ஆய்வு மீதான சர்ச்சையை குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்க கியான்வாபிக்குள் செல்லாமலும் அக்கட்டிடத்தை தொடாமலும் கள ஆய்வு நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக, ‘காஸ்மிக் ரே மியு ஆன்ஸ் சர்வே’ எனும் விண்வெளிக் களஆய்வு நடத்த அவர் யோசனை கூறியுள்ளார்.
மணிஷ் அகர்வாலின் இக்கடிதத்தை ஆய்வு செய்த பிரதமர் அலுவலகம் அத்தகைய ஆய்வுக்கான சாத்தியக்கூறுகளை அறிய முடிவு செய்துள்ளது. இதற்காக அக்கடிதத்தை இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் (ஏஎஸ்ஐ) தலைமையகம் மூலமாக அதன் கொல்கத்தா கிளைக்கு ஜுன் 11-ல் அனுப்பியுள்ளது.

இதையடுத்து மணிஷ் அகர்லால் குறிப்பிட்டுள்ள விண்வெளிக் கள ஆய்வு தொடர்பான கருத்துகளை துறை நிபுணர்களை தொடர்பு கொண்டு ஏஎஸ்ஐ கேட்டு வருகிறது. வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்களிடமும் யோசனை கேட்கப்பட்டுள்ளது. இந்தவகை விண்வெளி கள ஆய்வின் மூலம் மண்ணுக்கு அடியில், சுவர்களுக்கு உள்ளே இருப்பதையும் எந்த சேதமும் ஏற்படுத்தாமல் கண்டறியலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தவகை களஆய்வின் மூலம் கியான்வாபி மசூதிக்கு முன்பாக அங்கு விஷ்வேஸ்வரர் கோயில் இருந்ததா என எளிதில் அறிய முடியும் எனவும் மணிஷ் அகர்வால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒசுகானாவில் இருப்பதாகக் கூறப்படும் சிவலிங்கத்தின் உண்மை நிலை என்ன என்பதையும் விண்வெளிக் களஆய்வில் கண்டுபிடிக்க முடியும் எனவும் தெரிகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் ஏஎஸ்ஐ.யின் ஓய்வுபெற்ற இயக்குநர் ஜெனரல் பி.ஆர்.மணி கூறும்போது, “இது போன்ற தொழில்நுட்பம் ஏஎஸ்ஐ. யிடம் இல்லை. அதேசமயம் இது இந்தியாவில் தனியாரிடம் உள்ளது. இதேவகையில், ஜியோரேடார் சர்வே எனும் பெயரிலான ஒரு தொழில்நுட்பத்தை அயோத்தியில் ராமர்கோயில் வழக்கில் கள ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டது.

தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ராமர் கோயில் தரப்பினருக்கு ஏதுவான ஆதாரங்கள் கிடைத்தன. இதேவகை, ஜியோ ரேடார் சர்வேயையும் கியான்வாபியில் பயன்படுத்தலாம்” என்று தெரிவித்தார்.
வாரணாசி, காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிங்காரக் கவுரி அம்மனை அன்றாடம் தரிசிக்க அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் வாரணாசி சிவில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கியான்வாபியில் கள ஆய்வு நடைபெற்றது.

இதில் மசூதியினுள் கோயில் இருந்ததற்கான பல முத்திரைகள், இந்து கடவுள்களின் சின்னங்கள் மற்றும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்ததாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஒசுகானாவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து பிரதமருக்கு ஆய்வாளர்மணிஷ் அகர்வால் கடிதம் எழுதியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in