Published : 13 Jun 2022 05:30 AM
Last Updated : 13 Jun 2022 05:30 AM

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி மீது புகார் | கண்ணீருடன் பேட்டியளித்த ஸ்வப்னா சுரேஷ் மயங்கி விழுந்தார்

ஸ்வப்னா சுரேஷ்

பாலக்காடு

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புக்கான என்ஐஏ, அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் அண்மையில் நீதிபதியிடம் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா ஆகியோருக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கமான ஷாஜ் கிரண் என்பவர் தன்னை மிரட்டியதாக ஸ்வப்னா சுரேஷ் சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். இதற்கு ஆதாரமாக ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். இந்த பின்னணியில் ஸ்வப்னாவின் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் மீது மதநிந்தனை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், பாலக்காட்டில் நேற்று முன் தினம் நிருபர்களிடம் கூறியதாவது:

என்னை பணிய வைக்க பேரம் பேசப்பட்டது. அந்த முயற்சி வெற்றி பெறாததால் எனது வழக்கறிஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். என்னை மிரட்டிய ஷாஜ் கிரண் கூறிய அனைத்தும் நடைபெறுகிறது. எனது நண்பர் சரித் கடத்தப்படுவார் என்று கூறினார். அதன்படி சரித் கடத் தப்பட்டு, போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

எனது வழக்கறிஞர் கைது செய்யப்படுவார் என்று ஷாஜ் கிரண் மிரட்டினார். அதன்படி இப்போது எனது வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தீவிரவாதியை போன்று என் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. என்னிடம் பணம் இல்லை. எனக்காக வாதிட புதிய வழக்கறிஞரை நியமிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். எனது நண்பர்களை பழிவாங்குவதை நிறுத்தி கொள்ளுங்கள். அதற்குப்பதிலாக என்னை கொன்றுவிடுங்கள். அதோடு இந்த கதை முடிவுக்கு வந்துவிடும்.

எனது உடல்நிலை சரியில்லை. நான் அழுவதால் என்னை கோழை என்று கருதிவிட வேண்டாம். எனது நிலையில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டேன். நான் அளித்த வாக்குமூலத்தில் உறுதியாக இருப்பேன். நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

நிருபர்களுக்கு பேட்டியளித்து கொண்டிருந்தபோது ஸ்வப்னா சுரேஷ் உணர்ச்சிவசப்பட்டு மயங்கிசரிந்தார். அருகில் இருந்த உறவினர்கள் அவரை உடனடியாக மருத் துவமனையில் சேர்த்தனர்.

தனியார் பாதுகாப்பு: தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத் தினர் மீது புகார் கூறியிருப்பதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பாலக் காட்டில் அவர் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீஸ் தரப்பில் 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதோடு ஸ்வப்னா பணியாற்றும் எச்ஆர்டிஎஸ் தொண்டு நிறுவன அலுவலகத்திலும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

போலீஸாரின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தனது பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர் களை நியமித்துள்ளார். அவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

முதல்வர் விழாவில் கருப்புக்கு தடை: தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேரளாவில் தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முதல்வர் செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்டப்படுகிறது.

இதன்காரணமாக முதல்வர் பங்கேற்கும் விழாக்களில் கருப்பு உடை, கருப்பு முகக்கவசம் அணிந்து வருவோருக்கு தடை விதிக்கப்படுகிறது. செய்தியாளர்களுக்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது.

முதல்வர் பினராயி விஜயன் நேற்று மலப்புரம் அருகே தாவனூர் சிறையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு கருப்பு முகக்கவசம் அணிந்து வந்தோருக்கு தடை விதிக்கப்பட்டது. முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் வேறு நிறத்தில் முகக்கவசம் வழங்கப்பட்டது.

காலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் கருப்பு முகக்கவசம் அணிந்திருந்த செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு திருநங்கைகள் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கேரளாவில் கருப்பு நிறமுடைய அனைத்து பொருட்களுக்கும் ஆளும் கட்சி தடை விதித்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x