Published : 09 Jun 2022 05:41 AM
Last Updated : 09 Jun 2022 05:41 AM

கரோனா இன்னும் குணமாகவில்லை: விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் வேண்டி சோனியா கோரிக்கை

புதுடெல்லி: கரோனா தொற்றிலிருந்து இன்னும் குணம் அடையாததால் அமலாக்கத் துறை முன் ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜூன் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை கடந்த 1-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் மறுநாளே சோனியா காந்திக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

அவர் கரோனாவில் இருந்து மீண்டால் அமலாக்கத் துறை முன் ஆஜராவதில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.

இந்நிலையில் காங்கிரஸ் வட்டாரங்கள் நேற்று கூறுகையில், “கரோனா தொற்றிலிருந்து சோனியா காந்தி இன்னும் குணம் அடையவில்லை. அவரது தற்போதைய பரிசோதனை அறிக்கையிலும் கரோனா பாசிட்டிவ் ஆகவே உள்ளது. எனவே விசாரணைக்கு ஆஜராக சோனியா கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்” என்று தெரிவித்தன.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அவரை ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் வெளிநாட்டில் இருப்பதால் தனக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என ராகுல் கோரினார். இதையடுத்து வரும் 13-ம் தேதி மத்திய டெல்லியில் உள்ள தங்கள் தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு ராகுலிடம் அமலாக்கத் துறை கூறியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை காங்கிரஸ் கட்சியின் 'யங் இந்தியன்' நிறுவனம் முறைகேடாக கையகப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x