Published : 08 Jun 2022 01:03 PM
Last Updated : 08 Jun 2022 01:03 PM

மாநிலங்களவைத் தேர்தலில் குதிரைபேரம்?- ‘தப்ப முயன்ற’ ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: சச்சின் பைலட்டுக்கு பாஜக திடீர் அழைப்பு 

ராஜஸ்தான் மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்றும் சச்சின் பைலட் தனக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பாஜக ஆதரவுடன் போட்டியிடும் சுபாஷ் சந்திரா கூறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

ஜூன் 10-ம் தேதி மீண்டும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக பாஜக 5வது வேட்பாளராக பிரபல ஊடக நிறுவன உரிமையாளர் எஸ்செல் குழுமத்தின் தலைவர் குழுமத் தலைவர் சுபாஷ் சந்திராவை களமிறக்கியுள்ளது.

பாஜகவு ஆதரவுடன் அவர் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எஸ்ஸல் குழுமத்தின் தலைவரான சுபாஷ் சந்திரா ஜீ குழுமம் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் தலைவராவார்.

ராஜஸ்தானில் மாநிலங்களவைக்கு நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் 3 மற்றும் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. சுபாஷ் சந்திரா ஐந்தாவது வேட்பாளராக களமிறங்குவதால் நான்காவது இடத்துக்கு இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு காங்கிரஸைச் சேர்ந்த உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரமோத் திவாரி போட்டியிடுகிறார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா

ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகிய மூன்று காங்கிரஸ் வேட்பாளர்கள். பாஜக சார்பில் முன்னாள் அமைச்சரான கன்ஷியாம் திவாரி ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார்.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றிபெற 41 வாக்குகள் தேவை. காங்கிரஸுக்கு 108 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்களும் உள்ளனர். காங்கிரஸை பொறுத்தவரையில் இரண்டு இடத்தில் உறுதியான வெற்றி உள்ளது. மேலும் ஒரு வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 15 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

சச்சின் பைலட் மற்றும் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே

13 சுயேச்சைகள், இரண்டு ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி உறுப்பினர்கள், பாரதிய பழங்குடியினர் கட்சியின் இரு எம்எல்ஏக்கள், இரண்டு சிபிஎம் எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலனாவர்கள் ஆதரவு காங்கிரஸுக்கு கிடைக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் 3-வது இடத்தில் வெல்ல காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.

பாஜகவை பொறுத்தவரையில் அவர்களுக்கு 30 உபரி வாக்குகள் உள்ளன. கூடுதலாக வெற்றி பெற இன்னும் 11 வாக்குகள் தேவை. எனவே 4-வது இடத்தில் யார் வெற்றி பெறுவது என்பதில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் முக்கிய பங்கு வகிக்கவுள்ளனர். பாஜக சுயேச்சைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் பாஜகவோ, ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க திட்டமிடுகிறது.

‘தப்ப முயன்ற’ காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

இதனிடையே ராஜஸ்தானின் ஆளும் காங்கிரஸ் கட்சி தனது சட்டப்பேரவை உறுப்பினர்களை உதய்பூருக்கு அருகிலுள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது. பாஜகவின் குதிரை பேரத்திற்கு பயந்து சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலரும் இந்த ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்ட்டுக்கு முதலில் வரவில்லை. பின்னர் முதல்வர் அசோக் கெலோட் நடத்திய நீண்ட பேச்சுவாரத்தைக்கு பிறகு அவர்கள் ரிசார்ட்டிற்கு வந்து சேர்ந்துள்ளனர். அவர்களுடன் முதல்வர் கெலோட் ஆலோசனை நடத்தியுள்ளார். இவர்களில் சிலர் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் திடீர் திருப்பமாக எட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று சுபாஷ் சந்திரா கூறியுள்ளார்.

சுபாஷ் சந்திரா

இதுகுறித்து அவர் கூறுகையில் "ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் சச்சின் பைலட்டை அவமானப்படுத்தினார். இதற்கு பழிவாங்க நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை சச்சின் பைட் தவறவிட்டால் 2028 வரை அவரால் முதல்வராக முடியாது. காங்கிரஸில் இருப்பதை அவர் அவமானமாக" உணர்கிறார். எட்டு எம்எல்ஏக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்பது எனது ஊகம்.

அவர்கள் சந்திரா மீது பாசத்தால் அல்ல, ஆனால் ராஜஸ்தான் அரசின் நடத்தை மற்றும் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தால் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வாக்களிப்பார்கள்’’ என சுபாஷ் சந்திரா கூறினார்.

இதுபோலவே ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவர்கள் சிலர் சச்சின் பைலட்டை தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தேர்தலுக்கு முன்னதாக, குதிரை பேர முயற்சியில் ஈடுபடுவதாக சுபாஷ் சந்திரா மற்றும் பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யுமாறு ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சுபாஷ் சந்திரா மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் துணை கொறடா மகேந்திர சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் மட்டுமல்லாமல் பாஜக எம்எல்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்புடன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x