டெல்லி அமைச்சர் சத்யேந்திரா ஜெயின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திரா ஜெயின்
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திரா ஜெயின்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திரா ஜெயின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சார்பில் ரெய்டு நடத்தப்படுகிறது.கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஒரு வாரத்துக்குப் பின்னர் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இது வழக்கு சம்பந்தமான நடவடிக்கை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வழக்கு பின்னணி: கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக மத்திய புலனாய்வுத்துறை வழக்குப்பதிவு செய்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர்.

ஆவேசமடைந்த கேஜ்ரிவால்: முன்னதாக கைதை கண்டித்துப் பேசியிருந்த அரவிந்த் கேஜ்ரிவால், "நான் ஏற்கெனவே கூறியிருந்தது போல் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலி வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்படுவார் என நான் கணித்திருந்தது நடந்துவிட்டது. இப்போது எனக்கு சில நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அடுத்தாக மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதற்காக போலியான வழக்குகளையும் அவருக்கு எதிராக தயார் செய்யும்படி மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நான் பிரதமரின் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். ஆம் ஆத்மி கட்சியின் எல்லா எம் எல்ஏக்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் கைது செய்து விடுங்கள். எங்களை சிறையில் தள்ளுங்கள். அனைத்து விசாரணை அமைப்புகளையும் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தச் சொல்லுங்கள். கைது நடவடிக்கைகளால் மக்கள் பணி தடைபடுகிறது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in