Published : 06 Jun 2022 09:04 AM
Last Updated : 06 Jun 2022 09:04 AM

'இந்தியாவை ஒன்றிணைக்கும் தருணம் இது' - ஈரான், கத்தார், சவுதி கண்டனத்தை தொடர்ந்து ராகுல் கருத்து

புதுடெல்லி: ''இந்தியாவை ஒன்றிணைக்கும் தருணம் இது" என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. கடைசியாக கண்டனத்தைப் பதிவு செய்த சவுதி அரேபியா, நூபுர் சர்மாவின் கருத்துகள் அவமரியாதையானவை. மற்ற மதத்தின் நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

அவதூறான கருத்தை தெரிவித்த பாஜக-வின் நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்தும், நவீன் குமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்ச்சை பின்னணி: கடந்த வாரம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் முகமது நபி குறித்து அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார் பாஜக செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த நுபுர் சர்மா. தொடர்ந்து முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி இருந்தார் பாஜக-வின் நவீன் குமார். அதனை எதிர்த்து இஸ்லாமியர்கள் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சில கடைக்காரர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிகிறது. அதனால் அந்த பகுதியில் வன்முறை வெடித்தது. அது தொடர்பாக கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது அம்மாநில காவல்துறை. இந்நிலையில் தான் வளைகுடா நாடுகளின் கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன.

ராகுல் காந்தி ட்வீட்: இதனையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "வெறுப்பு வெறுப்பைத் தான் ஈன்றெடுக்கும். அன்பும், சகோதரத்துவமும் நிறைந்த பாதை தான் இந்தியாவை முன்னேறச் செய்யும். இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது" என்று ட்வீட் செய்துள்ளார். #BharatJodo (இந்தியாவை ஒன்றிணைப்போம்) என்ற ஹேஷ்டேகுடன் அந்த ட்வீட்டை ராகுல் பகிர்ந்துள்ளார்.

பாரத் ஜோதோ யாத்திரை: காங்கிரஸ் தன்னை புதுப்பிக்க ஆரம்பித்துவிட்டது. அண்மையில் நடந்த சிந்தனைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவின்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களை தேர்வு செய்து அங்கு மக்கள் யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த யாத்திரை மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த யாத்திரையின் கொள்கை அரசியல் சாசன உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பேண, பிரிவினையை எதிர்கொள்ள ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளின் ஆதரவைத் திரட்டுவதே.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களில் 3500 கி.மீ தூரம் இந்த யாத்திரை நடைபெறுகிறது. கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர் காங்கிரஸின் இந்த முன்னெடுப்பிற்கு வரவேற்புகள் எழுந்துள்ளன. பாரத் ஜோதா யாத்திரை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை தேசத்தை ஒருமைப்படுத்த, நாட்டை இரு துருவகங்களாக பிரிக்க நினைப்போரிடமிருந்து காப்பாற்றும் முயற்சி என்று காங்கிரஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x