Published : 05 Jun 2022 06:11 AM
Last Updated : 05 Jun 2022 06:11 AM

ரூ.800 கோடி மதிப்பில் ஜெகன்னாதர் கோயில் மேம்பாட்டு பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: புகழ்பெற்ற புரி ஜெகன்னாதர் கோயிலில் ரூ.800 கோடி செலவில் நடத்தப்பட்டு வந்த மேம்பாட்டுப் பணிகளை நிறுத்தக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள புரியில் புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய தலமாக மாற்றுவதற்காக ஒடிசா மாநில அரசு ரூ.800 கோடியில் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தது.

இந்தப் பணிகளுக்குத் தடை கோரி அர்தேந்து குமார் தாஸ், சுமந்தா குமார் கதேய் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் பழமைவாய்ந்த புரி ஜெகன்னாதர் கோயிலானது பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சிச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயில் மேம்பாட்டுப் பணிகள் தடை செய்யப்பட்ட 100 மீட்டர் தூரத்துக்குள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக தேசிய நினைவுச் சின்னங்கள் துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது. மத்திய அல்லது மாநில அரசின் அகழ்வாராய்ச்சி இயக்குநர்கள்தான் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். மாநில அரசு தற்போது மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளால், கோயிலின் பாரம்பரிய பெருமைகளுக்கும், கோயிலுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது

இந்நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்துக்குப் பின், நீதிபதிகள் கூறியதாவது:

லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் புரி ஜெகன்னாதர் கோயிலில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது ஒடிசா மாநில அரசின் கடமை. ஏற்கனவே கோயில் கட்டுமானம் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றியே தற்போது பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்மைக் காலமாக இதுபோன்ற தேவையற்ற பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது.

மிக அற்பமான விளம்பர காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வழக்குக்கான செலவு தொகையான ரூ. 1 லட்சத்தை மனுதாரர்கள் ஒவ்வொருவரும் நீதிமன்றத்தில் வேண்டும். ஒரு வாரத்தில் இந்தத் தொகையை செலுத்த அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x