Published : 25 May 2016 12:00 PM
Last Updated : 25 May 2016 12:00 PM
கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் நகர்வலம் மேற்கொண்டார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு முழுவதும் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். சித்தராமையாவின் நகர்வலத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து நடந்த பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வென்று, மேயர் பதவியை கைப்பற்றியது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கி ஆய்வு செய்தார். விவசாயிகளின் பிரச்சினைகளை நேரில் பார்த்து, ஆறுதல் கூறியது அவருக்கு நற்பெயரை பெற்றுக்கொடுத்தது.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா மீண்டும் நகர் வலத்தை தொடங்கியுள்ளார். நேற்று காலை தனது கிருஷ்ணா இல்லத்தில் இருந்து அரசுப் பேருந்தில் கிளம்பிய சித்தராமையா மைசூர் சாலை, கண்டீரவா ஸ்டேடியம், இல்பூர் ஏரி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகளை உடனடியாக தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பெங்களூருவில் நிலவும் குடிநீர் பிரச்சினை, குப்பை பிரச்சினை, சாலை பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளுமாறு பெங்களூரு வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜூக்கு உத்தரவிட்டார். நேற்று மாலை வரை பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து குறைகளை கேட்ட சித்தராமையா, பிறகு மெட்ரோ ரயிலில் தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.
முன்னதாக சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெங்களூருவில் தொடங்கியுள்ள இந்த நகர்வலத்தின் மூலம் மக்களின் பிரச்சினையை நேரடியாக அறிந்து, உடனடியாக தீர்க்க முடிகிறது. காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அன்ன பாக்யா, பால் பாக்யா, தாலி பாக்யா உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் வெற்றிபெறும்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT