Published : 04 Jun 2022 05:43 AM
Last Updated : 04 Jun 2022 05:43 AM

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி ஆஜராக ராகுலுக்கு புதிய சம்மன்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு நிதிப்பற்றாக்குறை காரணமாக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.90 கோடியே 25 லட்சத்தை கடனாக அளித்தது.

அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் அந்நிறுவனத்தின் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோரை இயக்குநர்களாகக் கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. 50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம் ரூ.90 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.

இந்த வழக்கின் விசாரணைக் காக ராகுல் காந்தி கடந்த 2-ம் தேதியும் சோனியா காந்தி வரும் 8-ம் தேதியும் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், தான் வெளிநாட்டில் இருப்பதால் ஆஜராக அவகாசம் வேண்டும் என்று ராகுல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராகுலுக்கு அமலாக்கத்துறை நேற்று புதிய சம்மன் அனுப்பி உள்ளது. இதனிடையே சோனியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x