Published : 01 May 2016 12:01 PM
Last Updated : 01 May 2016 12:01 PM
மேற்குவங்கத்தில் 5-ம் கட்டமாக 53 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 78.25 சதவீத வாக்குகள் பதிவாகின.
மேற்குவங்க சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் நேற்று 5-ம் கட்ட தேர்தல் நடந்தது.
அதன்படி தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மாவட்டம், தெற்கு கொல்கத்தாவை சேர்ந்த 53 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இடதுசாரி- காங்கிரஸ் கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் 37 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மொத்தம் 349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஆளும் திரிணமூல் காங்கிரஸார் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வன்முறைகளில் ஈடுபட்டதாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெற்கு கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஒட்டுமொத்தமாக 78.25 சதவீத வாக்குகள் பதிவாகின. இறுதிகட்ட தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT