Published : 31 May 2022 11:07 AM
Last Updated : 31 May 2022 11:07 AM

மே 31 புகையிலை எதிர்ப்பு நாள் | மரங்களை அழித்து, தண்ணீரை வீணாக்கி, உயிரையும் பறிக்கும் சிகரெட் தேவையா?

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் புகையிலை பயன்பாட்டால் உயிரிழக்கின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. சிகரெட் தயார் செய்ய 600 மில்லியன் மரங்கள் அழிக்கப்படுகின்றன. சிகரெட் புகைப்பதால் 84,000,000 டன் கரியமில வாயு காற்றில் கலக்கிறது. சிகரெட் ஆலைகளில் 22,000,000,000 டன் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

சிகரெட் தண்ணீரை உறிஞ்சி, மரங்கள் அழியக் காரணமாக இருந்து, மனிதர்களின் உயிரையும் பறிக்கிறது. மண்ணின் வளம் குன்றவும் கூட சிகரெட் தயாரிப்பு காரணமாக உள்ளது.

1987ல் உலக சுகாதார நிறுவனம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில் ஆண்டுதோறும் ஏப்ரல் 7ல் உலக புகைபிடித்தல் இல்லா நாளாக கடைபிடிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆண்டு தோறும் மே 31ஆம் தேதியை புகையிலை எதிர்ப்பு நாள் என்று கடைபிடிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆண்டுதோறும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. புகைபிடித்தால் புற்றுநோய் வரும் என்பதுதான் பரவலாக மக்கள் அறிந்துகொண்ட தகவலாக இருக்கிறது. புகையிலையில் நோயை உண்டாக்கக்கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. இதனால்தான், தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்றப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். புகையிலையை சிகரெட்டாக மட்டுமல்லாமல் எந்த வடிவிலும் பயன்படுத்தினாலும் அது இதய நோயை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் புகையிலை பயன்பாடு அதிகமாக உள்ளது. சிலர் சிகரெட்டாகவும், சிலர் அதை வேறு வடிவத்திலும் உபயோகிக்கின்றனர். 15 வயதுக்கு மேற்பட்டோர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆண்களில் 42% பேர் புகையிலை பழக்கம் கொண்டுள்ளனர். பெண்களில் 14% பேருக்கு இப்பழக்கம் உள்ளது. கிராமப்புறங்களில் ஒவ்வொரு 3வது நபரும், நகர்ப்புறங்களில் ஒவ்வொரு 5வது நபரும் புகையிலை பழக்கம் உள்ளவராக உள்ளார். சிகரெட் புகைப்பவர்களில் 33% பேர் அவர்கள் 18 வயதில் இருந்தே புகைக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் நிகழும் 48% மரணங்கள் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் இதய நோய்களால் நடக்கின்றன. இளம் வயதினர் மத்தியில் ஏற்படும் இதய நோய்களுக்கு பெரும்பாலும் சிகரெட் பழக்கம் காரணமாக இருக்கிறது. அதேபோல் சிகரெட்டை நேரடியாக புகைக்காமல் சிகரெட் புகைப்பவரின் அருகாமையில் இருக்கும் செகண்டரி ஸ்மோக்கர்களுக்கும் இதய நோய் ஏற்பட 25 முதல் 30% வாய்ப்புள்ளது.

புகைப்பிடித்தலை, புகையிலை பழக்கத்தை நிறுத்திவிட்டால் பல்வேறு நன்மைகளும் உடலுக்கு ஏற்படத் தொடங்குகின்றன. புகைத்தலை விட்ட ஓராண்டில் இதய நோய்க்கான ஆபத்து பாதியாகக் குறைகிறது. புகைத்தலை விட்ட ஐந்தாண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறைந்துவிடுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், புகைத்தலை கைவிடுதல் அவ்வளவு எளிதல்ல எனக் கூறும் மருத்துவ நிபுணர்கள். அதற்கான வழிமுறைகளையும் தெரிவிக்கின்றனர். நிக்கோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி என்று ஒன்றுள்ளது. நிக்கோடின் கம், பேட் என ஏதாவது ஒன்றை சுவைத்தல் சிகரெட்டை கைவிட உதவும் எனக் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x