Published : 29 May 2022 11:00 AM
Last Updated : 29 May 2022 11:00 AM

நாடுமுழுவதும் குழாய் மூலம் குடிநீர்: 50 சதவீதம் நிறைவு

புதுடெல்லி: நாடுமுழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தில் 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாக மத்திய அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதென்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மனதிற்கொண்டு, கிராமப்புறங்களில் உள்ள 50% வீடுகளுக்கு குழாய்வழி குடிநீர் இணைப்பை வழங்கி நாடு சாதனை படைத்துள்ளது.

கோவா, தெலங்கானா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, புதுச்சேரி மற்றும் ஹரியானா -வில் வீடுகளுக்கு ஏற்கனவே 100% குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், குஜராத், ஹிமாச்சலபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் 90%-க்கும் மேல் பணிகளை முடித்து, ‘அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்‘ இணைப்பு என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

மகாத்மா காந்தியின் ‘கிராம சுயராஜ்யம்‘ என்ற கனவை நனவாக்கும் விதமாக, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரமளித்து, குடிநீர் வினியோகத் திட்டங்களில் சமுதாயத்தை ஈடுபடுத்துவதே ஜல் ஜீவன் இயக்கத்தின் நோக்கம். பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 9.59 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளுக்கு, குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளில் வசிக்கும் பெண்களும், சிறுமிகளும், சுட்டெரிக்கும் வெயில், மழை, உறைபனிக்கிடையேயும், தண்ணீர் தேடி நீண்டதொலைவுக்கு நடந்து செல்லும் அவலத்திலிருந்து விடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் முன்னோடித் திட்டமான அனைத்து வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை, ஜல் சக்தி அமைச்சகம், மாநிலங்கள் /யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து, 2024-ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்குவதை உறுதி செய்யும்.

2019-ம் ஆண்டு ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டபோது, 3.23 வீடுகள், அதாவது 17% கிராமப்புற மக்கள் தான், குழாய்வழி குடிநீர் வசதியைப் பெற்றிருந்தனர். ஆனால், 27.05.2022 நிலவரப்படி, 108 மாவட்டங்களில், 1,222 வட்டாரங்களில், 71,667 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 1,51,171 கிராமங்கள் குழாய்வழி குடிநீர் இணைப்பைப் பெற்றுள்ளன. இந்தக் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, நாடு ‘சுதந்திர அமிர்தப் பெருவிழா‘-வைக் கொண்டாடி வரும் வேளையில், சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, குடிநீர் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x