Last Updated : 29 May, 2022 05:00 AM

 

Published : 29 May 2022 05:00 AM
Last Updated : 29 May 2022 05:00 AM

முஸ்லிம் பெண்ணை காதலித்ததால் தாக்குதல் - கர்நாடக மாநிலத்தில் பட்டியலின இளைஞர் உயிரிழப்பு

விஜய் காம்ளே

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுர்கியில் முஸ்லிம் பெண்ணை காதலித்த தலித் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம் வாடி அருகேயுள்ள பீமா நகரைச் சேர்ந்தவர் விஜய் காம்ளே (25). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் வாடி ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான முஸ்லிம் பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விஜய் காம்ளே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது பெண்ணின் சகோதரர் சையத் அகமது வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன் உறவினர்களின் உதவியோடு அவரை வாடியில் உள்ள ரயில் பாலத்துக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

அங்கு விஜய் காம்ளேவை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர். இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுநாள் அவரது உடலைக் கண்ட பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விஜய் காம்ளேவின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கலபுர்கி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், சம்பந்தப்பட்ட முஸ்லிம் பெண்ணின் சகோதரர்கள் சையத் அகமது (24), சஹாபுதீன் (19) மற்றும் உறவினர் நவாஸ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், சகோதரியை காதலித்ததாலே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

ஸ்ரீராம சேனை போராட்டம்

இதனிடையே பட்டியலின இளைஞர் கொல்லப்பட்டதைக் கண்டித்து கலபுர்கி ஸ்ரீராம சேனை அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக சென்ற ஸ்ரீராம சேனை அமைப்பினர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்க முயற்சித்தனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து ஸ்ரீராம சேனை நிர்வாகி சித்தலிங்க சுவாமி கூறும்போது, “கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் இந்து இளைஞர்கள் முஸ்லிம்களால் காதலின் காரணமாக கொல்லப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஹைதராபாத்தில் உள்ள சரூர் நகரில் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ததற்காக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டார். கலபுர்கியில் நடந்த படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய எங்களை போலீஸார் ஒடுக்குகின்றனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொல்லவிடாமல் தடுக்கின்றனர். இந்தக் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x