Published : 28 May 2022 07:47 AM
Last Updated : 28 May 2022 07:47 AM

குவாட் உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த 2 வெற்றி

புதுடெல்லி: குவாட் உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கு ராஜாங்க ரீதியாக 2 வெற்றிகள் கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்களிடையே கருத்து நிலவுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடைபெற்றது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி டெல்லி திரும்பினார்.

இந்நிலையில், டோக்கியோவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் இந்தியா 2 குறிப்பிடத்தக்க ராஜதந்திர வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலையாக செயல்பட்டது. ஆனால் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ரஷ்யாவை, இந்தியா கண்டிக்கும் என உலக நாடுகள் எதிர்பார்த்தன. குறிப்பாக ரஷ்யாவை இந்தியா கண்டிக்கும் என அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் இந்தியா யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணியாமல் கவனமாக நடுநிலை நிலைப்பாட்டை கையில் எடுத்தது.

குவாட் உறுப்பு நாடுகளுக்கு இடையே உக்ரைன் மீதான இந்தியாவின் நிலைப்பாடு அதிர்ச்சியானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில காலத்துக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு அசைக்கும் வகையில் இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

ஆனால் டோக்கியோ மாநாட்டில், இந்தியாவின் நிலை அசைக்க முடியாமல் இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

உக்ரைன்-ரஷ்யா...

உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலையை குவாட் அமைப்பு உறுப்பு நாடுகள் வெளிப்படையாகப் பாராட்டின என்றும் ஆனால், ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பை ஜனநாயக நாடான இந்தியா கண்டிக்காதது குறித்து பல குரல் எழுந்ததை தடுக்க முடியவில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற அமைப்புகளில் தான் ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டுக்கு அப்பால் வரும் எந்த அழுத்தத்தையும் இந்தியா எதிர்க்கும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருந்து தெளிவாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இருவரும் தங்கள் பகிரங்க அறிக்கைகளில் ரஷ்யாவைக் கண்டித்தனர். பிரதமர் மோடி தனது பொது அறிக்கையில் உக்ரைனையோ அல்லது ரஷ்யாவையோ குறிப்பிட்டு எந்தவித வார்த்தையையும் வெளியிடவில்லை.

குவாட் அமைப்பு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் உக்ரைனை குறிப்பிட்டு இந்தியா பேசவில்லை. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஆதரவைத் திரட்டுவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுகிறது. எனவே அதற்கு இந்தியா இடம் தரவில்லை.

மேலும் அந்த கூட்டறிக்கையில் "உக்ரைனில் நிலவும் துயரமான மோதல்", "உக்ரைனில் உள்ள மோதல்கள் மற்றும் நடந்து கொண்டிருக்கும் துயரமான மனிதாபிமானநெருக்கடிக்கு நமது பதில்கள்’’, ‘‘இந்தோ-பசிபிக் பிராந்தியம் விளைவுகள்" என்றே இந்தியா குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்கங்கள், ரஷ்யாவைப் பின்பற்றி தைவான் மீது சீனா படையெடுப்பதில் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது. இது குவாட் உச்சி மாநாட்டில் இந்தியாவின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

தீவிரவாதம் தொடர்பான விவாதத்தின்போது கூட்டறிக்கையை குவாட் அமைப்பு வெளியிட்டது. அதில் "அனைத்து வடிவங்களிலுமான தீவிரவாதம் மற்றும் வன்முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எந்த வகையிலும் தீவிரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்துகிறோம்.

உலகளாவிய தீவிரவாதத்துக்கு எதிரான எங்களின் போராட்டத்தை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறப்பட்டிருந்தது.

தீவிரவாதத்தை வேரறுத்தல், தீவிரவாத ஆதரவாளர்களை கண்டித்தல், தீவிரவாத குழுக்களுக்கு எந்தவொரு ஆயுதங்கள், நிதி அல்லது ராணுவ ஆதரவையும் மறுக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் குவாட் உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மும்பை மற்றும் பதான்கோட் தீவிரவாதச் செயல்களில் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தும் ஆப்கானிஸ்தான் நாட்டை இனி எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ அல்லது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவோ அல்லது பயிற்சியளிக்கவோ அல்லது திட்டமிடவோ அல்லது நிதியுதவி செய்யவோ பயன்படுத்தக்கூடாது என்றும் உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்து நாடுகளும் தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவமும் மாநாட்டில் உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தீவிரவாதத்தை முற்றிலும் வேரறுக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. குவாட் மாநாட்டில் தீவிரவாதம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது.

இது மாநாட்டில் இந்தியா வின் 2-வது வெற்றியாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x