Published : 27 May 2022 11:34 AM
Last Updated : 27 May 2022 11:34 AM

'நாடாளுமன்ற ஆவணங்களைக் கூட எடுத்துச் சென்று வரம்புமீறும் சிபிஐ' - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இரண்டாவது நாளாக டெல்லி சிபிஐ அலுவலகம் வந்த கார்த்தி சிதம்பரம், சோதனை என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் வரம்பு மீறுவதாக குற்றஞ்சாட்டினர். இது குறித்து நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகனும் சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி,யுமான கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும் இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சிபிஐ சமீபத்தில் வழக்குப் பதிவு செய்தது.

பஞ்சாபில் டிஎஸ்பிஎல் எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத் தர, டிஎஸ்பிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டில் விளக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டார்

இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று ( மே 27) காலை இரண்டாவது நாளாக ஆஜராகினார்.

முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரெய்டுகள் என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள், ஐடி துறை நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்பான சில முக்கியமான ஆவணங்களைக் கூட எடுத்துச் சென்றுள்ளனர். அந்த நிலைக்குழுவில் நான் ஒரு உறுப்பினராக உள்ளேன். நிலைக்குழு சார்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள சாட்சியங்களை கேட்க நான் தயார் செய்த கேள்விகள் அடங்கிய கோப்புகளைக் கூட அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். எனது குரலை ஒடுக்கவே இதை செய்துள்ளனர். இது வரம்பு மீறல்.

கடந்த சில நாட்களாகவே நானும், எனது குடும்பத்தாரும் ஆளும் கட்சியால் குறிவைத்து விமர்சிக்கப்படுகிறோம். அவர்களின் தூண்டுதலின் பேரில் எனது குடும்பத்தினரும், நானும் மாறி மாறி சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகளில் சிக்கவைக்கப்படுகிறோம். சட்டவிரோத, அரசியல் சாசன உரிமைகளை மீறிய நடவடிக்கைகளுக்கு நான் தொடர்ச்சியாக ஆளாக்கப்படுகிறேன்.

ஆனால் அவர்கள் அழைக்கும்போது செல்ல வேண்டியது என் கடமை என்பதால் செல்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், வரும் மே 30 வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x