Published : 26 May 2022 08:57 AM
Last Updated : 26 May 2022 08:57 AM

சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும் இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சிபிஐ சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று ( மே 26) காலை ஆஜராகினார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், "என் மீதான வழக்குகள் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒன்று போலியானது, மற்றொன்று மிகவும் போலியானது, மூன்றாவது வழக்கு மிகமிக போலியானது. ஒரே ஒரு சீனருக்கு கூட நான் விசா வாங்கித் தரவில்லை" என்றார்.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தார். ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். ஒருவேளை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதாக இருந்தால் அவரிடம் முன்கூட்டியே அவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குற்றச்சாட்டும், சோதனையும்: பஞ்சாபில் டிஎஸ்பிஎல் எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத் தர, டிஎஸ்பிஎல் நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டார்.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்களை கார்த்தி சிதம்பரம் மறுத்தார். விசா நடைமுறையில் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட நான் உதவவில்லை என்றும் சிபிஐ தன் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

கார்த்தி மீதான வழக்குகள்: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து சென்றார். நாடு திரும்பிய 16 மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x