Published : 25 May 2022 05:23 AM
Last Updated : 25 May 2022 05:23 AM

சிறுவனின் வெறுப்புணர்வு கோஷம் தொடர்பாக கேரளாவில் 3 பேர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழாவில் கடந்த 21-ம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) சார்பில் நடைபெற்ற ஜன மகா சம்மேளனம் நிகழ்ச்சியின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது ஒருவரின் தோளில் அமர்ந்திருந்த சிறுவன், இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆவேசமாக கோஷமிட்டான். அது மதவெறியை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. கூட்டத்தில் சென்றவர்கள் சிறுவனின் கோஷத்தை வழிமொழிந்து கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பிஎப்ஐ-யின் ஆலப்புழா பகுதி தலைவர் நவாஸ், செயலாளர் மஜீப் மீது ஆலப்புழா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த அன்வர் என்பவர், சிறுவனை அழைத்து வந்துள்ளார். அவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தது. கேரளாவில் அரசியல் கூட்டங்களுக்கு சிறாரை அழைத்து செல்லக்கூடாது என்று உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கை நடத்த உயர் நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x