Published : 24 May 2022 10:50 AM
Last Updated : 24 May 2022 10:50 AM

பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை; இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வாக்கியங்கள் மட்டுமே நீக்கியுள்ளோம்: கர்நாடக அமைச்சர்

பாடப்புத்தகத்திலிருந்து பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை. மாறாக அதில் இடம் பெற்றிருந்த இந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன என்று கர்நாடக கல்வி அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப் புத்தக்கத்தில் இருந்து பெரியார், நாராயண குரு குறித்த பகுதிகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தநிலையில் அது குறித்து கர்நாடக கல்வி அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியதாவது: "சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், சமூக சீர்திருத்தவாதிகள் நாராயண குரு, ஈவெரா பெரியார் அல்லது 18ஆம் நூற்றாண்டில் மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பற்றி எந்த ஒரு பாடமும் நீக்கப்படவில்லை. பாடப்புத்தகத்தில் சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. சந்திரசேகர ஆசாத், ராஜ்குரு, சுக்தேவ் சிங் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. சில பாடங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

பெரியார் பற்றிய பாடம் நீக்கப்படவில்லை. மாறாக அதில் இடம் பெற்றிருந்த இந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் திப்பு சில்தானுக்கு துதிபாடிய வாக்கியங்களை நீக்கியுள்ளோம். அந்த வரலாற்றின் மறுபக்கம் பற்றிய தகவல்களையும் சேர்த்துள்ளோம். நாராயண குரு பற்றிய பாடம் பத்தாம் வகுப்புக்குப் பதில் வேறு வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாருக்கும் எந்த துதியும் பாடாமல் வரலாற்றை உண்மையானதாக மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கவுள்ளோம். இதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அது பற்றி விவாதிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

அதேபோல் ஆர்எஸ்எஸ் தலைவர் கேஷவ் பலிராம் ஹெட்க்வேரின் பேச்சை பாடப் புத்தகத்தில் சேர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம். ஹெட்கேவர் மிகப்பெரிய தேசியவாதி. ஆவர் காங்கிரஸில் இருந்து கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். கிலாஃபத் இயக்கம் தோல்வியடைந்த பின்னர் தேசத்தின் மாண்பினை தூக்கி நிறுத்த 1925ல் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கண்டறிந்தார்.

இதற்கு முன்னாள் இருந்த பாடநூல் கழக தலைவர் பரகூர் ராமச்சந்திரப்பா பல்வேறு பாடங்களை நீக்கியிருக்கிறார். குறிப்பாக கு.வேம்புவின் கவிதைகள், காந்தி, அம்பேத்கர் பாடங்களில் சில பிரிவுகளை நீக்கி இருக்கிறார். அப்போதெல்லாம் எந்த சர்ச்சையும் எழவில்லை. ஆனால் இப்போது சிலர், அறிவுஜீவிகள் என அழைத்துக் கொள்ளும் சிலர் பாடப்புத்தகத்தில் சாதி, மதம் என பிரச்சினைகளை எழுப்பி அரசியல் செய்கின்றனர் " என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x