Published : 24 May 2022 05:20 AM
Last Updated : 24 May 2022 05:20 AM

ஜப்பானில் புத்த மதம் பரப்பிய மதுரை தமிழர் போதிசேனா

புதுடெல்லி: ஜப்பான் பயணத்தையொட்டி அந்த நாட்டின் முன்னணி நாளிதழான யோமிரி ஷிம்பனில் பிரதமர் நரேந்திர மோடி தலையங்க கட்டுரை எழுதியுள்ளார். அதில், ஜப்பானில் புத்த மதத்தைப் பரப்பிய போதி சேனாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ள போதி சேனா, தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர். கி.பி.704-ம் ஆண்டில் மதுரையில் பிராமண குடும்பத்தில் பிறந்த அவர் தனது இளமை பருவத்தில் கடல் மார்க்கமாக சீனா சென்று அங்கிருந்து கி.பி. 736-ம் ஆண்டில் ஜப்பானுக்கு சென்றார்.

அப்போது பேரரசர் ஷோமு ஆட்சி நடத்தினார். அன்றைய தலைநகரான நாராவில் பேரர சர் ஷோமு, தோடாஜி பவுத்த கோயிலை புதிதாக கட்டியிருந்தார். கோயிலில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட புத்தர் சிலையின் கண்களை மூத்த புத்த துறவி வர்ணம் தீட்டி திறப்பது வழக்கம். அந்த கவுரவத்தை போதி சேனாவுக்கு பேரரசர் வழங்கினார்.

பவுத்த மதத்தை பரப்பியதோடு ஜப்பானின் பாரம்பரிய நடனம், இசையையும் அவர் உருவாக்கினார். அவற்றை ஜப்பானியர்கள் இன்றளவும் போற்றி பாதுகாத்து வருகின்றனர். கி.பி. 760-ம் ஆண்டில் ரியுசென்ஜி பவுத்த கோயிலில் அவர் உயிரிழந்தார். கோயிலை ஒட்டிய மலைப் பகுதியில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதியை ஜப்பானியர்கள் புனித பூமியாக போற்றி வருகின்றனர். அவர் உருவாக்கிய கீகான் மடாலயம் ஜப்பான் முழுவதும் வியாபித்து பரவியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x