Published : 21 May 2022 07:07 PM
Last Updated : 21 May 2022 07:07 PM

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுகிறது.

உலக அளவில் பணவீக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனில் அக்கறைகாட்டி வருகிறது. இதன் விளைவாக, பாஜகவின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் சராசரி பணவீக்கம் முந்தைய அரசாங்கங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதாக கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோலை பொறுத்தவரை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயையும் குறைத்துள்ளோம். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும்'' என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், மத்திய அரசுக்கு ஒரு நிதியாண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்படும் என கணிக்கப்படுகிறது. கடந்த 40 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தமாற்றமும் இல்லாமல் இருந்தச் சூழலில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பணவீக்கம் - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இதர அறிவிப்புகள்:

சமையல் கேஸ் சிலிண்டர் மானியம்: மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) திட்டத்தின் கீழ் 9 கோடி பயனாளிகளுக்கு சமையல் கேஸ் ஒன்றுக்கு ரூ.200 ரூபாய் மானியமாக வழங்கப்படும். (ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்.)

சுங்க வரி குறைப்பு: இந்தியாவின் இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப் பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்படுகிறது.

சிமென்ட்: சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும். சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும். மேலும், சிமென்ட் விலையை குறைக்கவும், சிமென்ட் கிடைப்பதை உறுதி செய்யவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உர மானியம்:இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1.05 லட்சம் கோடியுடன் கூடுதலாக உர மானியமாக ரூ.1.10 கோடியுடன் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ''மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனில் அக்கறைகாட்டி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x