Published : 20 May 2022 04:50 AM
Last Updated : 20 May 2022 04:50 AM

காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய லஷ்கர் தீவிரவாதிகள் 5 பேர் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கையெறி குண்டு தாக்குதல் நடத்தியது தொடர்பாக லஷ்கர் தீவிரவாதிகள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் திவான் பாக் பகுதியில் புதிதாக ஒரு மதுக்கடை திறக்கப்பட்டது. அந்தக் கடை மீது கடந்த 17-ம் தேதி புர்கா அணிந்த மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடினர். இந்தத் தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்த போலீஸார் சில ஆதாரங்களை திரட்டினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் போலீஸார் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது 4 தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவிய ஒருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ஒரு மோட்டார் சைக்கிள், துப்பாக்கிகள் மற்றும் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x