Last Updated : 18 May, 2022 08:28 PM

29  

Published : 18 May 2022 08:28 PM
Last Updated : 18 May 2022 08:28 PM

“குதுப்மினார் கோபுரம் கட்டியது குத்புதீன் அல்ல; விக்ரமாதித்யாவின் சூரியக் கோபுரம் அது” - ஓய்வுபெற்ற அதிகாரி சர்ச்சை தகவல்

புதுடெல்லி: டெல்லியிலுள்ள குதுப்மினார் கோபுரம், குத்புதீன் ஐபக் மன்னர் கட்டியது இல்லை. சூரியதிசை அறிய ராஜா விக்ரமாதித்யா கட்டிய சூரியக் கோபுரம் அது எனச் சர்ச்சைக்குரியத் தகவல் வெளியாகி உள்ளது. இதை இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் கட்டிய மசூதிகள் மற்றும் புராதனச் சின்னங்கள் மீது இந்துத்துவா அமைப்புகளால் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இதில், உத்தரப் பிரதேசம் வாரணாசியின் கியான்வாபி மசூதி, மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி, ஆக்ராவின் தாஜ்மகால் மற்றும் ஜாமா மசூதி உள்ளிட்டவற்றின் வரிசையில் டெல்லியின் குதுப்மினாரும் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசின் தொல்லியல் துறையில் (எஸ்ஐயில்) பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான தரம்வீர் சர்மா, புதிதாக ஒரு சர்ச்சைக்குரியத் தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "குதுப்மினார் கோபுரம், டெல்லியின் சுல்தான்களில் ஒருவரான குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்டது இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இன்று (புதன்கிழமை) தரம்வீர் சர்மா வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியிலிருப்பது குதுப் மினார் இல்லை, அது குதுப்-அல்-தீன் ஐபக்கால் கட்டப்பட்டவும் இல்லை. அது, 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது. சூரியன் இடம் மாறும் திசையை அறிய கட்டியதால் அதன் பெயர் சூரியக் கோபுரம் ஆகும். ஏஎஸ்ஐ சார்பில் நான் அங்கு ஆய்வு செய்த போது அதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்த சூரியக் கோபுரம் செங்குத்தாக இல்லாமல் 25 அங்குலம் அளவில் சாய்ந்திருக்கும். இந்த சாய்வானது சூரியனின் திசையை அறிய அமைக்கப்பட்டது. ஜூன் 21 நாளில் அரை மணி நேரத்திற்கு அதன் நிழல் கீழே விழாது. அறிவியல் ரீதியாகக் கட்டப்பட்ட அந்தக் கோபுரம் ஒரு தொல்பொருள் சான்றாகும். அந்த கோபுரமானது ஒரு தனிக்கட்டிடமே தவிர அருகிலுள்ள மசூதியுடன் அதற்கு எந்த தொடர்பும் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் மெஹரோலி பகுதியில் வரலாற்றுச் சுற்றுலா தலமாக குதுப்மினார் அமைந்துள்ளது. இது, டெல்லி சுல்தான் வம்சத்தின் முதல் மன்னரான குத்புதீன் ஐபக்கால் 1198 -ல் தொடங்கப்பட்டது. அதற்கு முன் அங்கு ராஜா பிருத்விராஜ் சவுகானால் கட்டப்பட்ட கோயில்கள் இருந்ததாகவும் கருதப்படுகிறது.

தற்போது, மத்திய அரசின் தொல்லியல் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள அதன் நுழைவு வாயிலில் ’குவ்வத்தூல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சக்தி)’எனும் பெயரிலான மசூதி ஒன்று அமைந்துள்ளது.

முஸ்லிம்களால் தொழுகை நடத்தப்பட்டுவரும் இந்த மசூதியானது 27 இந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர் பல ஆண்டுகளாகப் புகார் கூறி வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக டெல்லி நீதிமன்றங்களில் பாஜக, பல இந்துத்துவா அமைப்பினர் வழக்குகள் தொடுத்திருப்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x