Published : 18 May 2022 07:51 AM
Last Updated : 18 May 2022 07:51 AM

அசாம், அருணாச்சலில் வெள்ளம் நிலச்சரிவால் 11 பேர் உயிரிழப்பு: சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு

குவாஹாட்டி: வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேரை காணவில்லை.

அருணாச்சலப் பிரதேச தலைநகர், இட்டா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவால் கடந்த 15-ம் தேதி இரவு முதல் 5 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். அங்கு மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் , மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட பல அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 6 பேரை காப்பாற்றினர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அருணாச்சல முதல்வர் பீம கந்து இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு நிவாரண முகாம்களையும் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. அசாம் மாநிலம் வெள்ளத்தில் சிக்கி இருவரும், நிலச்சரிவில் சிக்கி 4 பேரும் உயிரிழந்தனர். வெள்ளம் பாதித்த சாச்சர் மாவட்டத்தில் 6 பேரை காணவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 72 நிவாரண முகாம்களில், 33,248 பேர் தங்கியுள்ளனர்.

2,800 பயணிகள் மீட்பு

நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் திமா ஹசோ மாவட்டத்தில் உள்ள லும்டிங்-பாதர்பூர் வழித்தடத்தில், 2 ரயில்களில் 2,800 பயணிகள் கடந்த 2 நாட்களாக சிக்கி தவித்தனர். அவர்களை விமானப்படையினர் உதவியுடன் இந்திய ரயில்வே மீட்டது. சேதமடைந்த ரயில் பாதைகளை சரிசெய்ய வேண்டியுள்ளதால், இங்கு சுமார் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x