நிலக்கரி ஊழல் வழக்கில் மம்தா மருமகனிடம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

நிலக்கரி ஊழல் வழக்கில் மம்தா மருமகனிடம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ.1,352 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் இதில் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி ருஜிரா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியது.

கடந்த ஆண்டு இருவர் மீதும் அமலாக்கத் துறை வழக்குபதிவு செய்தது. ஊழல் தொடர்பாக விசாரணைக்கு டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு இருவருக்கும் அமலாக்கத்துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அபிஷேக் பானர்ஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். கொல்கத்தாவில் தன்னிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும் அவர் கோரினார்.

இதை விசாரித்த நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு கொல்கத்தாவில் அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்த நேற்று அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. ‘‘அமலாக்கத்துறையின் விசாரணைக்கு மேற்குவங்க அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதிகாரிகள் விசாரணைக்கு வரும்போது பாதுகாப்பு வழங்க வேண்டும். கொல்கத்தாவில், விசாரணை நடத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர், அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in