Published : 17 May 2022 02:02 PM
Last Updated : 17 May 2022 02:02 PM

அசாம், அருணாச்சலை புரட்டிப்போட்ட கனமழை | வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி; பலர் மாயம்

அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை கடந்த சில நாட்களாக கனமழை புரட்டிப்போடும் சூழலில் அங்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். 8 பேரது நிலைமை என்னவானதென்று தெரியவில்லை.

அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்ததாகவும் தலைநகர் இடாநகரில் நடந்த இரண்டு நிலச்சரிவுகளே இதற்குக் காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மே.15 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து அருணாச்சல் தலைநகர் இடாநகரில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டன. இரண்டு பெண்கள் உள்பட 6 பேரை உயிருடன் மீட்டன. ஆனாலும் 5 பேர் மண்ணில் புதையுண்டு இறந்தனர். இதனையடுத்து முதல்வர் பிரேமா காண்டு, ஆறு, ஏரிக் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

அருணாச்சலில் இன்னமும் மழை தொடர்ந்து வருவதால் ஆங்காங்கே மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

அசாமில் சேதம் அதிகம்: இதேபோல், அசாமில் சச்சார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். லக்கிம்பூர் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒருவரும், டிமா ஹாசா மாவடத்தில் நிலச்சரிவில் சிக்கி 3 பேரும் என மொத்த 6 பேர் உயிரிழந்தனர்.

இன்று (மே 17) காலை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்ட அறிக்கையில், "மார்ச் 1 ஆம் தேதி முதல் மே 16 ஆம் தேதி வரை மாநிலத்தில் சராசரியாக 592.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

கடந்த 72 மணி நேரமாக இடைவிடாது பெய்த மழையால் அசாம் மாநிலத்தில் 24 மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மத்திய, மற்றும் மேற்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 2385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 811 கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 1277 வீடுகள் பகுதியாகவும், 5262 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 20,587.32 ஹெக்டேர் விவசாய நிலம் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. கொப்பிலி, பாரக், குஷியாரா நதிகளில் நீர்மட்டம் அபாய வளைவை தாண்டிச் செல்கிறது.

மழை காரணமாக சாலைகளும் சேதமடைந்துள்ளன. மேற்கு அசாமில் தமுல்பூர் மாவட்ட இரும்புப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மேகாலயாவில் இரும்புப் பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x