Published : 16 May 2022 07:52 AM
Last Updated : 16 May 2022 07:52 AM

பாகிஸ்தானில் 2 சீக்கியர்கள் கொலை: இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் சுமார் 15,000 சீக்கியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெஷாவர் நகரின் படாலால் பகுதியில் சுல்ஜித் சிங் (42), ரஞ்சித் சிங் (38) ஆகிய சீக்கியர்கள் மளிகை கடை நடத்தி வந்தனர். அவர்கள் இருவரும் நேற்று தங்கள் கடைகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பெஷாவர் நகரில் 2 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம். படுகொலை குறித்து நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும். கொலையாளிகளை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும்.

இவ்வாறு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீக்கியர்கள் படுகொலை தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பல்வேறு சீக்கிய அமைப்புகள் பாகிஸ்தான் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுபான்மையினரின் உயிர், உடைமைகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 2 சீக்கியர்கள் கொலையில் தொடர்புடையவர்களை கே.பி. மாகாண போலீஸார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். அவர்களை தண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பெஷாவர் போலீஸார் கூறும்போது, "சுற்றுவட்டார சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். இதன் அடிப்படையில் கொலையாளிகளை கண்டுபிடித்து அவர்களின் முகக்திரையை கிழிப்போம்" என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x