Published : 17 May 2016 08:33 PM
Last Updated : 17 May 2016 08:33 PM
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர முறைகேடு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து எடுத்து சோனியா உள்ளிட்டோரின் பெயருடன் வெளியிட்டதற்காக, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.
மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை காங்கிரஸ் எம்.பி சாந்தாராம் நாயக் வழங்கினார்.
“இணையதளத்தில் உள்ள விவரங்களை சுவாமி பிரின்ட் அவுட் எடுத்துள்ளார். அதில், சோனியா காந்தி, அகமது படேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை சுப்பிரமணியன் சுவாமி மறைமுகமாக சாட்டுவதாகவே இதன் பொருள்.
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேலிடம் இருந்து சுப்பிரமணியன் சுவாமி அதிகாரப்பூர்வமாக எந்த கடிதத்தையும் பெறவில்லை, அவரிடம் கடிதமும் இல்லை. எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர்களில் சோனியா பறந்தது குறித்து எவ்வித கேள்வியும் எழவில்லை. ஏனெனில் அவர் எந்த பொறுப்பையும் வகிக்கவில்லை. அகமதுபடேலை சோனியாவின் அரசியல் செயலாளர் என்று கூறி அந்த தகவலை தீய எண்ணத்துடன் சுப்பிரமணியன் சுவாமி கையாண்டுள்ளார். நீதிமன்ற உத்தரவு நகல் எதையும் அவர் வைத்திருக்கவில்லை. எனவே, உரிமை மீறல் விதிகளின் கீழ், சுப்பிரமணியன் சுவாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT