Published : 15 May 2022 07:29 AM
Last Updated : 15 May 2022 07:29 AM

திருப்பதி கோயிலில் ஏப்ரல் மாதம் 99 லட்சம் லட்டு பிரசாதம் விற்பனை

திருமலை: திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் நேற்று முன்தினம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியான ‘டயல் யுவர் ஈ.ஓ’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொலைபேசி மூலம் பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி பதிலளித்தார்.

இதில், அவர் பேசியதாவது: சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த 3 நாட்களும் கூடுதலாக சாமானிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், மோர், சிற்றுண்டி, உணவு போன்ற வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

கோடை வெயிலுக்கு மாட வீதிகளில் வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24-ம் தேதி முதல் மூத்த குடிமகன்கள், மாற்று திறனாளி பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ரூ.3.60 கோடி செலவிட்டு ஸ்ரீவாரி மெட்டு மார்க்கம் சீரமைக்கப்பட்டது. அலிபிரியில் ரூ.300 கோடியில் சிறுவர்களுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. திருமலையில் தியான மண்டபம் பிரம்மாண்டமாக கட்டப்படுகிறது. ரூ.18 கோடியில் உண்டியல் பணம் எண்ணும் ‘பரகாமணி’ அரங்கு விரைவில் கட்டப்படும்.

பக்தர்கள் உண்டியல் மூலம் ஏப்ரலில் ரூ.127 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். மேலும் ஆன்லைன் மூலம் ரூ.4.41 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. 99.07 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 27.76 லட்சம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 9.91 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

இவ்வாறு தர்மா ரெட்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x