Published : 14 May 2022 06:26 AM
Last Updated : 14 May 2022 06:26 AM

உ.பி. கியான்வாபி மசூதியில் கள ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உ.பி. வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் நேற்று வெள்ளிக் கிழமை தொழுகை முடிந்து முஸ்லிம்கள் வெளியே வருகின்றனர். மசூதியில்கள ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம்: பிடிஐ

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த அம்மனுக்கு பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. தினமும் பூஜை நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த குழு அமைத்தது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் வாராணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கள ஆய்வை 17-ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இம்மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு பரிசீலித்தது. பின்னர் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், ‘‘இன்னும் வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்க்காததால். இப்போது கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது’’ என்று கூறினார். எனினும் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x