Published : 11 May 2022 10:02 PM
Last Updated : 11 May 2022 10:02 PM

தாஜ்மகால் அமைந்துள்ள நிலம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது - பாஜக எம்பி தியா குமாரி

ஜெய்ப்பூர்: புராதன சின்னமான தாஜ்மகால் நிறுவப்பட்டுள்ள நிலம் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி (Diya Kumari).

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய மகால் இது. 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டடதாக வரலாறு. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு சென்று பார்வையிட்டு வருவது வழக்கம்.

வரலாறு இப்படி இருக்க தாஜ்மகாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளை திறந்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்நிலையில், தாஜ்மகால் அமைந்துள்ள நிலம் தங்கள் குடும்ப சொத்து என தெரிவித்துள்ளார் பாஜக எம்.பி தியா குமாரி.

"தாஜ்மகால் அமைந்துள்ள இடத்தில் எங்களது நிலமும் இருந்தது. தனி நபர்களிடம் உள்ள நிலத்தை அரசு கையகப்படுத்தும் போது அதற்கான தொகையை வழங்குவது வழக்கம். அது போல அப்போது அந்த நிலப்பரப்பை ஆண்ட அரசன் இழப்பீடு தொகையை வழங்கியதாக நான் கேள்விப்பட்டேன். இருந்தாலும் அதை எதிர்த்து யாராலும் அப்போது குரல் கொடுக்க முடியவில்லை. ஏனெனில் அப்போது அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள்.

அந்த இடம் எங்களுக்கு சொந்தம் என்பதற்கான ஆவணம் கூட எங்களிடம் உள்ளது. அது ஜெய்ப்பூர் ராஜ வம்சத்தின் பதிவேடுகளுக்கான அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை தர நாங்கள் தயார். அந்த நிலத்தை ஷாஜகான் கையகப்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளது. அதனை நான் இன்னும் முழுவதுமாக பார்க்கவில்லை.

அதற்காக நான் தாஜ்மகால் இடிக்கப்பட வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், அங்கு பூட்டப்பட்டுள்ள அறையில் என்ன உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தாக வேண்டும். அந்த அறையின் கதவுகளை திறந்தால் உண்மை வெளிவரும்" என தெரிவித்துள்ளார் அவர்.

ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமந்த் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் தான் தியா. அவர் ஜெய்ப்பூர் ராஜ வம்சத்தை சேர்ந்தவர் எனவும் சொல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x