Published : 10 May 2022 12:08 PM
Last Updated : 10 May 2022 12:08 PM

வட இந்தியாவில் நாளை முதல் மீண்டும் வெப்ப அலை: வானிலை மையம் எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் வரும் 15 ஆம் தேதி வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே முந்தைய ஆண்டை விட வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கோடை தொடங்கியது முதலே உஷ்ணம் வாட்டி வதைக்கிறது. இந்த ஆண்டிலும் விதிவிலக்கில்லாமல் கோடை வெயில் தொடங்கிய ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெப்பம் உயர்ந்தது. பல்வேறு மாநிலங்களிலும் வெப்பநிலை 40 - 45 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.

டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியது. கடந்த வாரத்தில் நாட்டில் பரவலாக வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. சில இடங்களில் வெப்ப அலை வீசியது.

இந்தநிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. அசானி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே அசானி புயல் உருவாவதற்கு சில நாட்கள் முன்னதாகவே வட இந்தியாவில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது. வெப்ப அலையும் மறைந்தது.

டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் குறைந்தன. இந்தநிலையில், டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் வரும் 15 ஆம் தேதி வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், நாளைய (புதன்கிழமை) வெப்ப நிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனத் தெரிவித்துள்ளது. நேற்று, டெல்லியில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது நடப்பு ஆண்டில் இயல்பான வெப்ப அளவை விட ஒரு டிகிரி அதிகமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x