(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க இதுவரை 1.5 லட்சம் பேர் பதிவு

Published on

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத்குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். எனினும், கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யாத்திரை நடை பெறவில்லை. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. 13 வயதுக்கு மேற்பட்டோர், 75 வயதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே யாத்திரையில் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது முன்பதிவு தொடங்கி 26 நாட்கள் முடிந்த நிலையில் 1.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டுடன் இந்த ஆண்டை ஒப்பிடும்போது முதல் 26 நாட்களில் பதிவானோர் எண்ணிக்கை 246 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த 2 ஆண்டு களுக்குப் பிறகு அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்கு அனுமதி கிடைத்திருப்பதால் பக்தர்கள் அதிக அளவில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் 6 லட்சம் பக்தர்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவி்த்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in