Published : 07 May 2022 06:54 AM
Last Updated : 07 May 2022 06:54 AM

தலாக்-இ-ஹசன், தலாக்-இ-எசான் ஆகியவற்றுக்கும் தடை விதிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் பெண் மனு தாக்கல்

புதுடெல்லி: முத்தலாக் போல் தலாக்-இ-ஹசன், தலாக்-இ-எசான் ஆகியவற்றையும் குற்ற செயல்களாக அறிவித்து தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் காசியாபாத்தைச் சேர்ந்த பெனசிர் ஹினா என்ற பெண் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தைச் சேர்ந்தவர் பெனசிர் ஹினா. இவர் டெல்லியைச் சேர்ந்த யூசப் நகி என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு முஸ்லிம் வழக்கப்படி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப சண்டை காரணமாக பெனசிர் ஹினாவை கடந்தாண்டு டிசம்பர் மாதம் வீட்டு விட்டு வெளியே அனுப்பினார் யூசப்.

இவர் கடந்த 5 மாதங்களாக பெனசிர் ஹினாவை தொடர்பு கொண்டு பேசவில்லை. இந்நிலையில் தனது வக்கீல் அஸ்வினி குமார் துபே என்பவர் மூலம் கடிதம் ஒன்றை பெனசிர் ஹினாவுக்கு, யூசப் அனுப்பியுள்ளார். அதில் தலாக்-இ-ஹசன் முறையின் கீழ் முதல் விவாகரத்து கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமரசம் ஏற்படாவிட்டால்..

தலாக்-இ-ஹசன் முறையின் கீழ், ஒவ்வொரு மாதம் ஒரு முறை தலாக் கூறப்படும். 3 மாதத்திற்குள் சேர்ந்து வாழ சமரசம் ஏற்படாவிட்டால், 3வது முறையாக தலாக் கூறி திருமண உறவு முறித்துக் கொள்ளப்படுகிறது.

இதையடுத்து பெனசிர் ஹினா உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.அதில் வரதட்சனை கொடுக்கும்படி எனது பெற்றோர் கட்டாயப்படுத்தப்பட்டனர். அதன்பின் அதிக தொகை கொடுக்கவில்லை என கணவர் குடும்பத்தினர் தொந்தரவு செய்தனர்.

திருமணத்துக்குப் பின்பும், கருவுற்றிருந்தபோதும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் நான் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டேன். தற்போது தலாக்-இ-ஹசன் முறைப்படி முதல் தலாக் கூறியுள்ளார். இந்த முறை இஸ்லாமின் அடிப்படை கொள்கை அல்ல. அதனால் தலாக்-இ-ஹசன் மற்றும் 3 மாதம் இடைவெளிக்குப்பின் ஒரே ஒரு முறை தலாக் கூறி திருமண உறவை முறித்துக் கொள்ளும் தலாக்-இ-எசான் முறையையும், முத்தலாக் போல் குற்றச் செயலாக அறிவித்து தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு பெனசிர் ஹினா கூறியுள்ளார்.

திருமண உறவை முறிக்கும் முத்தலாக் முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி அறிவித்தது. அதனால் தற்போது தலாக்-இ-ஹசன் மற்றும் தலாக்-இ-எசான் ஆகிய முறைகள் பின்பற்றப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x