வியாபம் ஊழல் வழக்கில் முக்கிய நபர் கான்பூரில் கைது

வியாபம் ஊழல் வழக்கில் முக்கிய நபர் கான்பூரில் கைது
Updated on
1 min read

வியாபம் ஊழல் வழக்கு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபரான சிவ்ஹரி என்பவர் கான்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ அதிகாரிகளுடன் இணைந்து உ.பி. அதிரடி போலீஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச டிஜிபி ஜாவீது அகமது இது குறித்து கூறும்போது, "வியாபம் ஊழல் வழக்கு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபர் ரமேஷ் சிவ்ஹரி கான்பூரில் கைது செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேச மாநில தொழிற்கல்விக்கான தேர்வுகளில் போலி நபர்களை தேர்வெழுத வைப்பது போன்ற சட்டவிரோத வேலைகளை இவர் செய்து வந்துள்ளார்" என்றார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவ்ஹரி கடந்த 2014-ல் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

'வியாபம்' என்பது மத்தியப் பிரதேத்தின் மாநில அரசுப் பணியிடங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் ‘பணியாளர் தேர்வாணையம்’ போன்ற அமைப்பு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in