Published : 24 May 2016 12:58 PM
Last Updated : 24 May 2016 12:58 PM
கடந்த வாரம் ஆன்லைனில் கசியவிடப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் வீடியோவில் 2 தமிழர்கள் உட்பட 11 பேர் இடம் பெற்றிருப்பதாக அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தி லேண்ட் ஆஃப் ஹிந்த்: பிட்வீன் பெயின் அண்ட் ஹோப் (The Land of Hind: Between Pain and Hope) என்ற தலைப்பில் கடந்த வாரம் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. 22 நிமிடங்கள் காட்சிகள் கொண்ட வீடியோ அரபு மொழியில் இருந்தது. டெலிகிராம், ட்விட்டரில் இந்த வீடியோ மே 19-ம் தேதியன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. அதற்கு முன்னதாக மே.15-ல் சிரியாவில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அந்த வீடியோ குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அந்த வீடியோ 10 மாதங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வீடியோவில் இருந்த ஒருவர் தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த ஹாஜா ஃப்க்ருதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் பிரஜையான ஹாஜா, 2013 நவம்பரில் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சிரியா சென்றார். அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியாததால் மீண்டும் இந்தியா திரும்பினார். பின்னர், 2014-ல் சென்னையில் இருந்து சிரியா சென்று துருக்கியில் ஐ.எஸ். இயக்கத்துடன் இணைந்தார்.
வீடியோவில் உள்ள மற்றொரு தமிழர், குல் முகமது மரக்காச்சி மரைக்காயர். இவரும் கடலூரைச் சேர்ந்தவர். குல் முகமது தற்போது ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் தலைமை பொறுப்பில் இருக்கிறார். இவர் கடந்த 2014-ல் சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்டார். ஆனால், அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் எனத் தெரியாமல் இருந்தார். இவரது தூண்டுதலின் பேரில் தான் ஹாஜா ஃபக்ருதீன் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தார்.
இந்த இருவரைத் தவிர அந்த வீடியோவில் இருப்பவர்களில் சாஜித் என்ற படா சாஜித், அபு ரசீது என்ற ஷேக், (இந்திய முஜாகிதீன் முன்னாள் உறுப்பினர்களாவர்) பஹத் ஷேக், அமந்த் டாண்டல் ஆகியோர் அடையாளர் காணப்பட்டுள்ளனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT