Published : 05 May 2022 06:54 AM
Last Updated : 05 May 2022 06:54 AM

ஆந்திராவில் வினாத்தாள் கசிவு: 25 அரசு ஆசிரியர்கள் கைது

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாள் முதல் நேற்று வரை ஆந்திர மாநிலத்தில் பல மாவட்டங்களில் வினாத்தாள்கள் சிறிது நேரத்திலேயே கசிந்தன. வினாத்தாள் வழங்கிய சில நிமிடங்களிலேயே தெலுங்கு, ஆங்கிலம், கணக்கு போன்ற பாட வினாத்தாள்கள் கசிந்தன.

தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக இருந்த ஆசிரியர்கள் சிலர் செல்போனில் வினாத்தாள்களை படம் எடுத்து அதனை வெளியில் உள்ள சிலருக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் பதிலுக்கு விடையை புகைப்படம் எடுத்து பல தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கல்வி துறை அமைச்சர் சத்தியநாராயணா அதிர்ச்சியுற்றார். இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் 25 ஆசிரியர்கள் வினாத்தாள் கசிவுக்கு காரணமென தெரிய வந்ததால், அவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர். மேலும், கர்னூல் கல்வித்துறை அலுவலக உதவியாளர் மற்றும் 5 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் 10-ம் வகுப்பு தேர்வுகளில் மாணவ, மாணவியர் நன்கு தேர்ச்சி அடைந்து தங்களது மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதுபோன்று நடந்து கொண்டதாக கைதான ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x