Published : 05 May 2022 07:43 AM
Last Updated : 05 May 2022 07:43 AM

2 ஆண்டுக்கு பிறகு ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு: வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி அதிகரிக்கும்

புதுடெல்லி: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டுவந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதைச் சமாளிக்கும் நோக்கில் ரெப்போ விகித்தை 0.40 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் தற்போது ரெப்போ விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் தாங்கள் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி அவசர நிலையாக ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கூடியது. 2 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிலையில் அக்கூட்டத்தின் முடிவை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று வெளியிட்டார்.

பணவீக்கம் எதிர்பார்த்த அளவைவிடவும் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத உயர்வு ஆகும். பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே ரெப்போ விகிதம் உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகப் பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சர்வதேச அளவில் நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தச் சூழலுக்கு மத்தியிலே இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக 2020 மே மாதம் நடந்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெப்போ விகிதம் மாற்றப்படவில்லை. இந்நிலையில் தற்போது ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இறுதியாக 2018 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் உயர்த்தப்படுகிறது.

பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி

ரிசர்வ் வங்கி அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் தலா 2.29 சதவீதம் அளவில் சரிவு காணப்பட்டது. 1306 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் குறியீட்டெண் 55,669 ஆக சரிந்தது. 391 புள்ளிகள் குறைந்து நிஃப்டி குறியீட்டெண் 16,677 ஆக சரிந்தது.

சென்செக்சில் பஜாஜ் பைனான்ஸ் 4.29%, பஜாஜ் பின் சர்வ் 4.18%, டைட்டன் கம்பேனி 4.11%, இந்தஸ்இந்த் வங்கி 3.98%, ஹெச்டிஎஃப்சி வங்கி 3.34%, மாருதி சுசூகி 3.17% ரிலையன்ஸ் நிறுவனங்கள் 3.14% அளவில் சரிவைக் கண்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x