Published : 04 May 2022 06:34 AM
Last Updated : 04 May 2022 06:34 AM

திருமலையில் மே மாத விசேஷங்கள்; மே 10 முதல் 12 வரை பத்மாவதி திருக்கல்யாணம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மே மாதம் பல விசேஷ நாட்கள் உள்ளது. அதன்படி, வரும் 5-ம் தேதி பாஷ்யகாரர் (இராமானுஜர்) சாத்துமுறை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மே 6-ம் தேதி கந்தகப்பொடி உற்சவமும், மேலும் மே மாதம் 6, 13,20,27 ஆகிய 4 நாட்களும் ஆண்டாள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

திருமலையில் பத்மாவதி திருக்கல்யாணத்தை முன்னிட்டு நாராயணகிரி பகுதியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து மே மாதம் 12-ம் தேதி உத்திர நட்சத்திரத்தை யொட்டி, உற்சவர்களான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பரின் வீதிஉலா நடைபெறும். 14-ம் தேதி, மதுரகவி ஆழ்வார் சாத்துமுறை, 16-ம் தேதி பவுர்ணமி கருட சேவை, 21-ம் தேதி திருவோணம் நட்சத்திரத்தையொட்டி அன்றிரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் வீதியுலா, மே 31-ம் தேதி ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, பாமா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். வரும் மே மாதம் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திருமலையில் நாராயணகிரி பகுதியில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் வைபோகமாக நடைபெற உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவலால் நடத்தப்படாமல் இருந்த இந்த பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள், இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான 10-ம் தேதி பெருமாள் திருமண மண்டபத்திற்கு கஜ வாகனத்திலும், 2-ம் நாள் அஸ்வ வாகனத்திலும், 3-ம் நாள் கருட வாகனத்திலும் தேவி, பூதேவி சமேதமாய் எழுந்தருள்வார். இதில் ஊஞ்சல் சேவைகளும், புராண, இதிகாச சொற்பொழிவுகள் நடைபெறும். பத்மாவதி திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, தினமும் நடைபெறும் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x