Published : 04 May 2022 08:55 AM
Last Updated : 04 May 2022 08:55 AM

'ராகுல் இரவு விருந்தில் பங்கேற்றால் உங்களுக்கு என்ன பிரச்சினை?' - மஹூவா மொய்த்ரா கேள்வி

'ராகுல் இரவு விருந்தில் பங்கேற்றால் உங்களுக்கு என்ன பிரச்சினை?' என பாஜகவினருக்கும், ட்ரோல்களுக்கும் சரமாரியாக கேள்விகளௌ முன்வைத்துள்ளார் திரிணாமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நேபாளத்தில் இரவு விருந்தில் பங்கேற்ற வீடியோக்களை பாஜக தலைவர்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ராகுலுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார் திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ராகுல் காந்தியோ இல்லை வேறு ஒரு நபரோ, அவருடைய தனிப்பட்ட நேரத்தில் நைட் கிளப் செல்கிறாரா அல்லது திருமண விருந்தில் பங்கேற்கிறாரா என்று கண்காணிப்பது யாருடைய வேலையும் இல்லை. பாஜக ட்ரால்கள், ராகுலை விமர்சிக்கும் முன் தங்கள் கட்சியினர் தேநீர் கோப்பையில் பீர் அருந்திக் கொண்டு வாழும் இரட்டை வாழ்க்கையைப் பற்றி அறிய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஓர் அரசியல்வாதி இரவு விடுதிக்கு செல்வது என்பது மோசமான விஷயமல்ல. இன்னும் சொல்லப்போனால், நாடாளுமன்றத்தில் போர்னோகிராஃபி படங்களைப் பார்ப்பதைவிட மோசமான செயல் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

இரவு விடுதியில் ராகுல் காந்தி: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் மதுபான விடுதியில் நடைபெற்ற இரவு விருந்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நேபாளத்தைச் சேர்ந்தவர் சும்னிமா உதாஸ். இவர் சிஎன்என் தொலைக்காட்சியின் டெல்லி செய்தியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2012-ம் ஆண்டில் நிர்பயா வழக்கு, கடந்த 2014-ம் ஆண்டில் மலேசிய விமானம் மாயமானது உட்பட பல்வேறு முக்கிய சம்பவங்கள் குறித்து செய்தி சேகரித்துள்ளார். பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சும்னியா உதாஸும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சும்னிமா உதாஸுக்கும் நீமா மார்ட்டின் ஷெர்பாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

சீன தூதருடன் ராகுல்? இந்த திருமணத்தில் பங்கேற்க 5 நாட்கள் பயணமாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் காத்மாண்டு சென்றார். அவரோடு 2 பேர் சென்றுள்ளனர். சும்னிமா உதாஸின் திருமணத்தை ஒட்டி காத்மாண்டின் புகழ்பெற்ற எல்ஓடி என்ற மதுபான விடுதியில் இரவு விருந்து நடைபெற்றிருக்கிறது. இதில் ராகுல் காந்தி பங்கேற்றிருக்கிறார்.

இதுதொடர்பாக 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. ஒரு வீடியோவில் மது அருந்தும் பெண்ணுக்கு அருகில் ராகுல் இருக்கிறார். அந்த பெண் நேபாளத்துக்கான சீன தூதர் ஹோ யாங்கி என்று கூறப்படுகிறது. மற்றொரு வீடியோவில் ராகுல் தனது செல்போனில் ஏதோ பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த 2 வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

காங்கிரஸ் பதில்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறும்போது, "பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அழையாவிருந்தாளியாக பங்கேற்றார். ராகுல் காந்தி அப்படி கிடையாது. நண்பரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் பங்கேற்றுள்ளார். திருமணத்தில் பங்கேற்பது ஒரு குற்றமா" என கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறும்போது, "எல்லோருமே விழா, விருந்துகளில் பங்கேற்கின்றனர். ராகுல் காந்தி தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்றதில் என்ன தவறு" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ராகுலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா. இவர் நாடாளுமன்றத்தில் பாஜக மீது அனல் பறக்கும் விமர்சனங்களை முன்வைப்பதால் நாடு முழுவதும் அறியப்பட்டவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x