Published : 15 May 2016 12:22 PM
Last Updated : 15 May 2016 12:22 PM
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு சக நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதனபுரம் தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் நடிகர் கே.பி.கணேஷ் குமார் போட்டியிடுகிறார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத் தில் கணேஷ் குமார் ஆதரவு திரட்டினார்.
இந்தப் பிரச்சாரத்தில் மோகன் லால் பங்கேற்றார். அப்போது, தொண்டர்களின் கரகோஷத்துக்கு நடுவே மோகன்லால் பேசும்போது, “கணேஷ் எனது நண்பர். அவரைப் பார்க்கவே இங்கு வந்தேன்” என்றார்.
மோகன்லாலின் நடவடிக்கை யால் அதிருப்தி அடைந்த நடிகர் சலிம் குமார் திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
தேசிய விருது பெற்ற சலிம் குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார் மோகன்லால். இந்நிலையில், இடதுசாரி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ததன் மூலம் அவர் சங்கத்தின் விதிகளை மீறிவிட்டார். சங்க உறுப்பினர்கள் யாரும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது எழுதப்படாத விதி” என்றார்.
இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் சிரிப்பு நடிகர் ஜெகதிஷ் கூறும்போது, “மோகன்லாலை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். நட்பு ரீதியாக கணேஷ் குமாரை சந்தித்ததாகக் கூறும் அவர், என்னை சந்திக்காதது ஏன்?” ஏன்றார்.
சங்கத்தைச் சேர்ந்த வேறு எவரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் சங்கத்தின் தலைவரும் மக்களவை எம்பியுமான (இடதுசாரி) இன்னசென்ட் கூறும்போது, “மோகன்லால் தனிப்பட்ட முறையில்தான் கணேஷ் குமாரை சந்தித்துள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT