

புதுடெல்லி: நேபாளத்துக்கு சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஓட்டல் இரவு விடுதியில் நடந்த கேளிக்கை நிகழ்வில் கலந்து கொண்டு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பத்திரிகையாளர் நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேபாளத்துக்கு சென்றார். இந்த பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதேசமயம் ஊடகங்களில் மட்டுமே தகவல் வெளியாகி இருந்தது.
திருமணம் முடிந்தத பிறகு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோவை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளா். வெறும் 12 நொடிகள் மட்டுமே இந்த வீடியோ உள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணுடன் ராகுல் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் இதுதொடர்பாக அக்கட்சியில் விவாதங்கள் நடந்து வரும் நிலையில் ராகுல் காந்தி நைட் கிளப் ஒன்றில் கேளிக்கை விருந்தில் கலந்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி இருப்பதாக பாஜக தலைவர்கள்வ விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மால்வியா கூறுகையில் ‘‘காங்கிரஸ் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கிறது. ஆனால் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு கேளிக்கை விருந்தில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ் தனது தலைமை பதவியை நேரு குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. இதுபோன்ற செயலால் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ‘‘முழு நேர சுற்றுலாப்பயணி, பகுதி நேர அரசியல்வாதி. பாசாங்குத்தனம் நிறைந்தவர். பயணம் முடிந்து நேரம் கிடைக்கும் போது போலி கதைகளையும் குற்றச்சாட்டுகளையும் உருவாக்கி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கள் நாட்டு மக்கள் மட்டு இல்லை. அவரது கட்சியினரையே தவறாக வழிநடத்துகிறது. ராகுல் காந்தி இதே பாதையில் சென்றால் நிலைமை இப்படித்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில் ‘‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்தநாள் கொண்டாட பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றார். அழைக்கப்படாத விருந்தாளியாக ராகுல் காந்தி செல்லவில்லை. நட்பு நாடான நேபாளத்தில் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி சென்றுள்ளார். இதில் பாஜகவினருக்கு என்ன அக்கறை’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.