Published : 02 May 2022 05:42 AM
Last Updated : 02 May 2022 05:42 AM

4-வது அலை இன்னும் உருவாகவில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூடுதல் இயக்குநர் தகவல்

புனே: இந்தியாவில் கரோனா 4-வது அலை இன்னும் உருவாகவில்லை என்றும் சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் தினசரி கரோனா தொற்று ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. இப்போது தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதனால் 4-வது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குநர் டாக்டர் சமிரன் பாண்டா நேற்று கூறியதாவது: "தினசரி கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனினும், இது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே (உள்ளூர் அளவில்) அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பரவலாக பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை கரோனா 4-வது அலைக்கான அறிகுறி உருவாகவில்லை.

கரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவோரில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம்அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால், சோதனை செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம். உதாரணமாக டெல்லியில் கரோனா சோதனையை அதிகரித்த பிறகு, தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7-லிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

3,324 பேருக்கு தொற்று: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்ப தாவது: "நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,324 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளில் 3,688 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்ததை விட சற்று குறைவாகும். இதுவரை 4 கோடியே 30 லட்சத்து 79,188 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 லட்சத்து 23, 843 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 19,092 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,876 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 36,253 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாசிட்டிவ் 0.71 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் 0.68 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 189.17 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x